“பாடசாலைப் பிள்ளைகளெல்லாம் ஆண் பிள்ளைகளாத் தோணல்லியோ உனக்கு?" என்றான் கிட்டா.
”எல்லாம் ஜாண்ஜாண் உண்டு…." என்றாள் பாகீரதி.
"ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளைதானே?" என்றான் கிட்டா.
"கொஞ்சம் இப்படி கொட்டில் பக்கம் வறயா?" என்றாள் பாகீரதி.
”என்ன சமாசாரம்?...”
"கனபாடிகள் உன்னைக் கட்டவிழ்த்து விட்டுட்டார். தும்பிலே கட்டிப் போட்டிருக்கும் சேங்கன்னை மட்டும் கட்டிப் போடலாமா, அதையும் அவிழ்த்துவிட்டுரு. பாவம் காலாறச் சுத்திட்டு வரட்டும்" என்றாள்.
கிட்டா அதைத் தறியிலிருந்து அவிழ்த்து விட்டதும் அது நாலுகால் பாய்ச்சலில் ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டது
"கிட்டா, எனக்கு ஒரு ஒத்தாசை பண்ணுவியா?" என்று பூர்வ பீடிகையோடு ஆரம்பித்தாள் பாகீரதி.
"என்ன சொல்லு!"
"தஞ்சாவூர் போனா அங்க மூர்த்தியைப் பார்ப்பியோல்லியோ? "
”தெரியலையே. அவன் எங்க இருக்கானோ, என்னவோ, யார் கண்டா?"
"நன்னாத் தேடிப் பாருடா. நிச்சயம் தஞ்சாவூர்லதான் இருப்பான்."
”கிடைச்சா என்ன சொல்லணும்?"