அவனை எப்படியாவது கையோடு அழைச்சுண்டு வந்துடு இங்கே."
"அவன் வரவே மாட்டான். ஏதோ ஒரு வைராக்கியமா இருக்கான். என்னன்னும் சொல்லமாட்டேங்கறான்?"
"சாப்பாட்டுக்கு என்ன செய்றானோ, என்ன கஷ்டப் படறானோ? கையில இருந்த காசெல்லாம்கூடத் தீர்ந்து போயிருக்குமே, பாவம் !" என்றாள்.
"கூப்பிட்டுப் பாக்கறேன். வந்தா அழைச்சுண்டு வரேன். உனக்கென்ன அத்தனை அக்கறை அவங்கிட்ட? சொல்லிக்காமப் போனவனை வெத்திலை பாக்கு வெச்சு கூப்பிடணமாக்கும்! கனபாடிகள் மனசைக் கஷ்டப்படுத்திட்டுப் போனவனாச்சே அவன்?"
"அவன் கிட்ட எத்தனை பாசம் வெச்சிருக்கார் அவர் ! எப்படிப் புலம்பினார்? ‘மூர்த்தி! நீ எங்கடா போயிட்டே?’ன்னு ஒருநா ராத்திரி, நான் கால் மிதிச்சிண்டிருக்கப்போ, வாய் விட்டுக் கதறினாரே, அது எனக்கில்லையா தெரியும்?"
"மூர்த்தி இல்லாம இந்தப் பாடசாலையே அழுது வடியறது கிட்டா! களையாவே இல்லை. நீ தேடிப்பாரு ; எப்படியும் கிடைச்சுடுவான். அவனைப் பார்த்து இந்தத் திருக்குறள் புத்தகத்தையும் பட்டு வேட்டியையும் கொடுத்துடு” என்றாள்.
"இந்த ரெண்டும் ஏது?”
"அவன் பெட்டியில இருந்தது."
"எனக்குக்கூட திருக்குறள் படிக்கனும்போல ஆசையாயிருக்கு" என்றான் கிட்டா.
"இந்தப் புஸ்தகத்தை நீ எடுத்துண்டுராதே. இது அவன் புஸ்தகம். ஜாக்கிரதையாக் கொண்டு போய்ச் சேர்த்துடு, யாருக்கும் தெரிய வேணாம்…"
"திருக்குறள் எல்லாருக்கும் பொதுதானே! அதை ஏன் யாருக்கும் தெரிய வேணாங்கதே? என்றான்