கிட்டா.
பாகீரதி ‘ஐயோ’ என்று தலையில் அடித்துக்கொண்டாள்.
இதற்குள் அந்தப் பக்கம் வந்த கமலா, மறைவில் சுவர் ஒரமாகச் சாய்ந்து என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை ஒட்டுக் கேட்டாள். பிறகு அவர்கள் எதிரில் போய் நின்று என்ன, எனக்குத் தெரியாம இங்க என்ன பேச்சு?" என்றாள்.
"ஒண்ணும் பேசலையே ! கிட்டா தஞ்சாவூர் போறானாம். அப்பா உத்தரவு கொடுத்துட்டாராம். குதிக்கிறான் !"
"அதுக்கு நீ என்ன சொன்னே?"
"திரும்பி வறப்போ குடமிளகாயும் வறுத்த முந்திரியும் வாங்கிண்டுவான்னேன்…"
"பொய் ! வேற ஏதோ சொல்லிண்டிருந்தயே!"
”வேற ஒண்ணும் சொல்லலையே!"
”மூர்த்தி பேர் அடிபட்டுதே! எப்படியும் தேடிக் கண்டு பிடின்னு சொல்லிண்டிருந்தது காதில் விழுந்ததே!"
"இந்தப் புதுக் கன்னுக்குட்டி மூர்த்தி எங்கேயோ ஒடிட்டுது, அதைத்தான் தேடிக் கண்டு பிடிடான்னு சொல்லிண்டிருந்தேன்!" என்று சமாளித்தாள் பாகீரதி.
“கையில என்னடா அது?" என்று கிட்டாவைப் பார்த்துக் கேட்டாள் கமலா.
"பட்டு வேட்டி. திருக்குறள் புத்தகம்."
"ஏது?"