Flexi Classics தொடர்கதை - வேத வித்து - 10 - சாவி
நூல் நூற்றுக் கொண்டிருந்த கனபாடிகளின் மனம் தக்ளியில் லயிக்காமல் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்ததால் நூலிழை ‘பட்’ ‘பட்’டென்று அறுபட்டுக் கொண்டிருந்தது.
" ’பாய்காட்’னா என்ன பண்ணப் போறாளாம்?" என்று கேட்டாள் கெளரி அம்மாள்.
"எல்லாருமாச் சேர்ந்து நம் வீட்டு விசேஷங்களுக்கு வராமல் நம்மை ஒதுக்கி வச்சுடுவா, அதுக்குப் பேர்தான் பாய்காட். ஊராருக்கு இங்கிலீஷ்ல தெரிஞ்சவார்த்தை அது ஒண்ணுதான்போல இருக்கு ஹ்ம்…" வருத்தத்தோடு சிரித்தார் கனபாடிகள்.
"அப்படி என்ன மகாபாவம் பண்ணிட்டயாம் நீ?"
“பாகீரதி கூந்தலை எடுக்காம இருக்காளே, அதுக்குத் தான்.. “
"அவாவா வீட்ல இப்படி ஒண்ணு நடந்திருந்தா அப்பத்தான் தெரியும் அந்தக் கஷ்டம். அது சரி; இத்தனை பேரும் பேசாம இருந்துட்டு இப்ப என்ன திடீர்னு பாய்காட்?" என்று கேட்டாள் கெளரி,
"கோபத்துக்குக் காரணம் வேற. நான் சொன்ன தீர்ப்பு, சிலபேருக்குப் பிடிக்கலை. இதுக்கு என் பேரில் குரோதம் பாராட்டிப் பழி வாங்க நினைக்கிறது சரியா…”
"அந்தக் கடுக்கன் ஆசாமிதான் ரொம்பத் துள்றான்." என்றான் கிட்டு.
"யாருடா அந்த கடுக்கன்? அவனுக்கென்ன அவ்வளவு ஆத்ரம்?"
"நேத்து உங்களையே எதிர்த்து கேள்வி கேட்டானே ஒருத்தன், அந்த அயோக்கியன் தான். அவன் நாசமாப் போயிடுவான்."
“கிட்டா யாரையும் சபிக்காதே! நீ வேதம் ஒதுகிறவன். சாபம் கொடுத்தா நிஜமாவே பலிச்சிடும்."
"நன்னாப் பலிக்கட்டும்; உங்களை எதிர்த்துப் பேசலாமா அவன்!"