தெரியாம எதுக்கு எடுக்கணும்? அப்புறம் படத்தின் பின்னால எதுக்குக் கொண்டுபோய் மறைக்கணும்?" என்று எண்ணி மனதுக்குள்ளேயே குழம்பினார் கனபாடிகள்.
"எதுக்கு முர்த்தி உங்ககிட்ட சொல்லிக்காமப் போறான்? போனவன் யாரும் என்னைத் தேடிண்டு வர வேணாம்னு லெட்டர் எழுதறான்?" என்றாள் கமலா.
"என்னைக் குழப்பாதே கமலா நேத்துலேந்து எல்லாமாச் சேர்ந்து நானே ரொம்பக் குழம்பிப் போயிருக்கேன். எனக்கு மண்டையே வெடிச்சுடும்போல இருக்கு. பூர்வ ஜன்மத்துலே என்ன பாவம் பண்ணினேனோ, இப்படியெல்லாம் அனுபவிக்கிறேன். முதல்ல நான் நாளைக்கே கெளரியோடு சிதம்பரத்துக்குப் போய் திவசத்தை முடிச்சுண்டு வந்துடறேன். அதுவரைக்கும் நீதான் பாகீரதியைப் பார்த்துக்கணும்" என்றார் கனபாடிகள்.
திடீரென்று வாசலில் பிராமணர்கள் ஏழெட்டு பேர் கூட்டமாக வந்து நிற்பது தெரிந்தது.
"கிட்டா ! வாசல்ல யாரோ வந்திருக்கா, போய்ப் பாரு" என்றார் கனபாடிகள்.
“அவாதான் ! அந்த ‘பாய்காட்’ கூட்டம்தான் வந்திருக்கு" என்று சொல்லிக்கொண்டே வாசலுக்கு விரைந்தான் அவன். பின்னோடு கனபாடிகளும் போனார். அந்தக் கடுக்கன் ஆசாமியை இரண்டு பேர் திண்ணையில் கொண்டு வந்து கிடத்தினார்கள். அவனுக்கு மூச்சு மட்டும் வந்து கொண்டிருந்தது.
”கனபாடிகளே, இவனைப் பாம்பு கடிச்சுட்டுது. நீங்கதான் மந்திரம் போட்டுக் காப்பாத்தணும்" என்று கூக்குரலிட்டது அந்தக் கும்பல்.
"பார்த்தயா ! சாபம் கொடுத்தயே, பலிச்சுட்டுது பார்" என்பதுபோல் கிட்டாவைப் பார்த்தார்.
"கடிச்சது என்ன பாம்புன்னு தெரியுமா?" என்று அவர்களிடம் கேட்டார்.
“நல்ல பாம்புதான். அதை அப்பவே அடிச்சுப் போட்டாச்சு!" என்றார் கூட்டத்தில் ஒருவர்.
"த்சு, த்சு பாம்பைக் கொல்லவே கூடாது. மகாபாவம்!" என்று சொல்லிக்கொண்டே தம்