"கெளரி ! எதுக்கும் நாம் முன்னேற்பாடா இருந்துடறது நல்லது. கடைசி நேரத்துலே நம்மாத்து திவசத்துக்கு யாரும் வராம இருந்தாலும் இருந்துடுவா. அப்புறம் காரியம் கெட்டுப் போயிடும். பித்ருகர்மாக்களை விட்டுட முடியுமா? அதுவும் தாயார் சிராத்தமாச்சே!"
"கவலைப்படாதே, அண்ணா நாளைக்கே ரெண்டு பேரும் சிதம்பரம் போயிட்டாப் போச்சு!" என்றாள் கெளரி.
"திருவிசகல்லூர் ஸ்ரீதர ஐயர்வாள் கதை தெரியுமோ, உனக்கு?" என்று கேட்டார் கனபாடிகள்.
"அதென்ன கதை? சொல்லு!"
"அந்தக் காலத்துல ஸ்ரீதர ஐயர்வாள்னு ஒருத்தர். அவர் கதையும் இப்படித்தான். அந்த ஊர் பிராமணாளெல்லாம் சேர்ந்துண்டு அவரை ‘பாய்காட்’ பண்ண ஆரம்பிச்சா. ‘நீங்க திவசம் பண்றதை ஒரு கை பார்த்துடறோம்’னு ஆவேசமா தடியும் கையுமா அவர் வீட்டைச் சுத்தி நின்னுண்டு திவசத்தன்னைக்கு ஒருத்தரையும் உள்ளே போக விடாமல் தடுத்துட்டா."
"அப்படி என்ன குத்தம் பண்ணிட்டார் அவர்?"
"யாரோ ஒரு ஹரிஜன், ஐயர்வாள் ஆற்று வெள்ளத்தைக் கடந்து போறதுக்கு ஒத்தாசை பண்ணியிருக்கான். அதுக்கு நன்றிக்கடனா அவர் அவனுக்குத் தன் வீட்டுத் தோட்டத்துல வைத்து சாப்பாடு போட்டிருக்கார், அது பெரிய பாவமாம்! அதுக்காக திவசத்தை நடத்த முடியாமத் தடுத்துட்டா. மணி பத்தாச்சு, பன்னிரண்டாச்சு, ஒண்ணாச்சு- சொல்லி வெச்சிருந்த பிராமணாள் யாருமே வரலை. ஐயர்வாள் கலங்கிக் கண்ணீர் வடிச்சு, மனம் உருகி தெய்வத்தைப் பிரார்த்தனை பண்ணிண்டார். அதனால ஆண்டவனே பிராமணர்கள் ரூபமா அவர் வீட்டுக்குள் பிரத்யட்சமாகி திவசத்தை நடத்தி வச்சட்டுப் போயிட்டார். வீட்டைச் சுத்தி காவல் காத்துண்டிருந்தவாளுக்கு ஒரே ஆச்சரியம்! அவர்கள் மட்டும் எப்படி உள்ளே போனாள்னு ஒருத்தரை ஒருத்தர் பார்த்து விழிச்சுண்டு நின்னா! பகவானை யாரால தடுக்க முடியும்? இவர்கள் கண்ணுக்கு அவன் தெரிவானா?
உண்மையா நடந்தது இது.