"அதெல்லாம் சரியா வராது கமலா, உனக்கு அந்த வீட்ல உரிமை இருக்கலாம். எனக்கு அது சம்பந்தி வீடுதானே? அவர்கள் வீட்டிலே போய் திவசம் பண்றேன்னு சொல்றது நியாயமில்லே. சுப காரியமாயிருந்தால் பரவாயில்லை. இது அப்படி இல்லையே !" என்றார் கனபாடிகள்.
"அது சரி அண்ணா ! இத்தனை நாளா நானும் கேட்ட தில்லை. நீயும் சொன்னதில்லை. எவ்வளவோ சாஸ்திரம் படிச்சிருக்கே, யாகம் பண்ணிருக்கே, சிரோமணிப் பட்டம் வாங்கிருக்கே. வேதவித்தாயிருக்கே. இவ்வளவும் இருந்தும் நீயே பாகீரதியை தலைமயிரோட இருக்க எப்படி சம்மதிச்சேங்கறதுதான் ஆச்சரியமாயிருக்கு" என்றாள் கெளரி.
"தசரதர் கைகேசிக்கு வரம் கொடுத்த மாதிரி நானும் பாகீரதியின் அம்மாவுக்கு ஒரு சந்தர்ப்பத்தில் சத்தியம் பண்ணிக் கொடுத்துட்டேன். அந்த சத்தியம்தான் என்னை இப்படி சிரமப்படுத்தறது.
"பாகீரதியைப் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்தவளாச்சே அவள்.
“நான் கண் மூடறதுக்கு முன்னால பாகீரதிக்கு ஒரு நல்ல இடமாப் பார்த்து கலியாணத்தைப் பண்ணி முடிச்சுடுங்க. அப்பத்தான் நிம்மதியாப் போவேன்"னு என்னிடம் சொல்லிக் கண்ணீர் விட்டாள்.
"இப்ப திடீர்னு அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன்?"னு அவளிடம் கேட்டேன்.
"என் சீதன சொத்தையெல்லாம் வித்துடுங்க. பாகீரதி கலியாணம்தான் முக்கியம்" என்றாள். அவசரம் அவசரமா ஒரு பையனைத் தேடிப் பிடிச்சு பாகீரதி கல்யாணத்தை முடிச்சேன். பாவம், பாகீரதி கொடுத்து வைக்கலே. ஒரு வாரத்துக்கெல்லாம் அவள் மாங்கல்யத்தை இழந்துட்டா. அடுத்த வருஷமே பாகீரதியின் அம்மா மாடு முட்டிக் கீழே விழுந்தவள் தான். அப்புறம் அவளும் எழுந்திருக்கலே, அந்த சமயத்துலதான் ஒரு நாள் "பாகீரதி சின்ன வயசுப் பெண். அவளை அலங்கோலப் படுத்திடாதீங்க!" என்று என்னைப் பார்த்து கெஞ்சி, சத்தியம் பண்ணிக் கொடுக்கச் சொன்னாள். செய்து கொடுத்துட்டேன் !"
இந்தச் சமயம் அங்கே வந்த கமலா "அத்தை உங்களை பாகீரதி உள்ளே வரச் சொல்றா?" என்றாள்.