வேத பாடசாலைல சேர்ந்திருக்கானாம். என் வயிற்றில் பால் வார்த்த மாதிரி இருக்கு ! பாகீரதிக்குத் தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவா ! அவளைக் கூப்பிடு! இங்கே இன்னைக்கு ஸ்வாமி நைவேத்தியத்துக்கு பால் பாயசம் பண்ணச் சொல்லணும் ! “ என்று மகிழ்ச்சிப் பெருக்கில் திக்குமுக்காடினார்.
"மூர்த்தியானா உங்ககிட்ட சொல்லிக்காமப் போயிட்டான் ! நீங்களோ அவன் மேல உயிரையே வெச்சிருக்கேள்!" என்றான் கிட்டா
” ’இவனுக்கு நீங்கதான் மாதா பிதா குரு தெய்வம் எல்லாம்’ என்று சொல்லி மூர்த்தியை அவன் தகப்பனார் என்னிடம் ஒப்படைச்சுட்டுப் போனார். மூர்த்தி காணாமப் போனதும் அவருக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம தவிச்சுப் போனேன். தினம் தினம் பகவானைப் பிரார்த்தனை பண்ணிண்டிருக்தேன். என் பிரார்த்தனை வீண்போகலே, ஸ்வாமி செவி சாய்ச்சுட்டார்!"
பாகீரதி, முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இன்றி சாதுவாக வந்து நின்றாள்.
"ஏண்டா, மூர்த்தியை இங்க அழைச்சுண்டு வரதுதானே? இங்க எல்லாரும் அவனைப் பாக்கறதுக்கு ஏங்கிப் போயிருக்கான்னு சொல்றதுதானே!" என்று பாகீரதியை ஒரக் கண்ணால் பார்த்துக்கொண்டே கிட்டாவைக் கேட்டாள் கமலா.
"சொல்லாம இருப்பனா ! புதுக் கன்னுக்குட்டிக்கு உன் பேரைத்தாண்டா வெச்சிருக்கோம். பாகீரதிதான் வைக்கச் சொன்னான்னுகூடச் சொல்லிப் பார்த்தேன். ஆனா அவன் எதுவுமே பேசலே, இடிச்ச புளியாட்டம் இருந்துட்டான்" என்றான் கிட்டா.
"அவன் எங்க இருந்தாலும் எப்படி இருந்தாலும் க்ஷேமமா இருந்தா சரி. நம்மையெல்லாம் மறந்தாலும் வேதத்தை மறக்காம இருக்கானே, அது போதும் எனக்கு !" என்று பரம திருப்தியோடு பேசினார் கனபாடிகள்.
"சும்மா சொல்லக் கூடாது. வேதத்துல அசைக்க முடியாத நம்பிக்கை வெச்சிருக்கான். பக்தின்னா கொஞ்ச நஞ்சமில்லே. உலகத்துலயே வேதம்தான் பெரிசுங்கற அளவுக்குப் பெரிய ஞானி மாதிரி பேசறான்" என்றான் கிட்டா.