"எனக்குத் தெரியும். மகா உத்தமமான பையன்டா அவன் ! ம்… ! ஏதோ ஒரு கெட்ட வேளை அவனை ஆட்டிப் படைக்கிறது. கிட்டா, நீ போய் சீக்கிரம் ஸ்நானத்தை முடிச்சுண்டு வா. நேரமாறது" என்று சொல்லி அனுப்பினார்.
தோட்டப்பக்கம் போன கிட்டாவை பாகீரதி வழியில் மடக்கி "மூர்த்தி என்னைப் பத்தி ஏதாவது சொன்னானா?" என்று குரலைத் தாழ்த்திக் கேட்டாள்.
"ஒண்ணும் சொல்லலை. பட்டுவேட்டியையும் புஸ்தகத்தையும் கொடுத்தேன். வாங்கிண்டான். அவ்வளவுதான்"
"யார் கொடுத்தான்னுகூடக் கேட்கலையா?"
” நானே சொல்லிட்டேன்"
"அதுக்கு என்ன சொன்னான்?"
"அதுக்கும் ஒண்ணும் சொல்லலை. முகத்தில ஒரு திருப்தி மட்டும் தெரிஞ்சுது!"
"என்னைப் பத்தி ஒரு வார்த்தைகூடப் பேசலையா!"
"பேசலையே!"
"அப்புறம்?."
"உள்ளே போயிட்டு கொஞ்ச நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்து பாக்கறேன். அந்த புஸ்தகத்துக்கு நீ போட்டிருந்த அட்டையைக் கிழிச்சுப் போட்டிருந்தான். ஏண்டா அட்டை போட்டா உனக்குப் பிடிக்காதோன்னு கேட்டேன். பதில் மழுப்பலா ஒரு சிரிப்பு அதோடு சரி!"
பாகீரதி முகம் பிரகாசமாயிற்று. "அம்மாடி அட்டையைப் பிரிச்சுப் பார்த்திருக்கான்" என்பதில் ஏற்பட்ட மகிழ்ச்சி அது.