சிறுகதை - அவன் பெண்,அவள் ஆண் - பா ஆதித்யா
சென்னை தியகராய நகரிலுள்ள பிரபலமான திருமண மண்டபம் முன்பு அந்த ஓலா கார் நின்றது.
இன்று அக்ஷயாவின் தங்கைக்கு திருமணம். நேற்று தான் அவளை தோலில் போட்டிக்கொண்டு போலியோ சொட்டு மருந்து போட சென்றதுபோல் இருந்தது அவளுக்கு. அக்ஷயாவால் மாலினிக்கு திருமணம் என்றால் நம்பவே முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் ஃபோன் செய்திருந்தாள் மாலினி.
”அக்கா, யாரை பத்தியும் கவலைபடாதே, எனக்காக நீ வந்தே ஆகனும்”
“இல்லடி, அது வந்து...“
“வந்து..போயி கதை எல்லாம் வேண்டாம்..ஆனால் ஒன்னு..நீ இல்லாமல் நான் தாலி கட்டிக்க மாட்டேன்,என்ன பத்தி உனக்கு தெரியும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தாள் மாலினி.
பிடிவாதக்காரி! செய்தாலும் செய்துவிடுவாள் என்ற பயம் ஒரு புறம் இருக்க, தன் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தன்னை அக்கா என்று அழைக்கும் ஒரே ஆள் அவள் தான். அந்த நன்றிக்காவது செல்வோம் என்று முடிவு செய்தாள்.
நீண்ட நாட்களுக்கு பின் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தாள் இன்று. மும்பையிலுருந்து விமானம் பிடித்து சரியாக முகூர்த்தம் முடிய அரை மணி நேரம் இருக்க வந்திருந்தாள், ஆசை தங்கை அழைத்த ஒரே காரணத்தினால். மண்டபம் முழுக்க உறவுகள் சுற்றி கொண்டிருந்தன. அவர்களை கண்டதும் சட்டென்று அந்த உற்சாகமெல்லாம் மறைந்தது . ஒருகனம் அப்படியே திரும்ப சென்று விடலாமா என்று யோசித்தாள். மறுகனம் பேனரில் இருந்த மாலினியின் முகம் கண்ணில் பட உற்சாகம் மீண்டும் பிறந்தது.
“மேடம், இடம் வந்ததிருச்சு” என்று ஓலா டிரைவர் கூற, யோசனையில் இருந்து மீண்டாள் .
“இவர்களுக்கெல்லாம் பயந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியுமா ?” என்று எண்ணியவாறு “ஏவ்வளவு ஆச்சு பா?” என்றாள் தனது ஆண் குரலில். டிரைவர் திடுக்கிட்டு பின் திரும்பினான். பின்பு எல்லாம் புரிய சுதாரித்துக் கொண்டான்.
“ஒன் ஃபிப்டி…. ஸாரி…சார்-னு கூப்பிடவா இல்ல மேடம்-னு கூப்பிடவா… இதுக்கு முன்னாடி இப்படி யாரும் வண்டில வந்ததே கிடையாது, எதாவது தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சிக்கங்க..”
“ஏன் ? இதுக்கு முன்னாடி பொண்ணுங்க உங்க வண்டியில ஏறியதே இல்லயா என்ன ? இந்தாங்க ஒன் ஃபிப்டி”
“ ஸாரி மேடம், இப்போ தெளிவா இருக்கேன்” என்று மரியாதை கலந்த புன்னகையுடன் பணத்தை பெற்றுக்கொண்டு சென்றான். பன்னீர் தெளிக்க நின்றிருந்தவர்கள் இவளை கண்டதும் எதோ முணுமுணுத்துக்கொண்டார்கள்.
“ஹும்…இந்த டிரைவர்க்கு இருக்கும் முற்போக்கு எண்ணம் கூட தங்களை பெரிய மேதாவிகள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் இந்த கூட்டத்திடம் இல்லை” என்று நொந்துக்கொண்டே மண்டபத்தை நோக்கி நடந்தாள். மண்டபத்தின் முகப்பில் சிறிய கோபுரம் அமைத்து அதில் பராசக்தியின் விக்கிரத்தை வைத்திருந்தார்கள்.
அங்கே சென்று மாலினிக்காக வேண்டிவிட்டு, “தாயே, இந்த வேடிக்கை மனிதர்களிடம் இருந்து என்னையும், என் பொல்லாத வாயிடம் இருந்து அவர்களையும் காப்பாற்று” என்று முறையிட்டு மண்டபத்தின் உள்ளே நடந்தாள்.
அக்ஷயாவிற்க்கு மூன்றாம் பாலினத்தின் மீது நம்பிக்கை இல்லை. தான் பெண் என்று அவளுக்கு தெரியும். ஒருவர் ஆணா பெண்ணா என்பது அவர் அவர்களின் உள்ளம் தான் முடிவு செய்ய வேண்டும், அவர்களின் உறுப்புகள் அல்ல என்பது அவளின் நம்பிக்கை.
முதன்முதலாக தான் ஒரு பெண் என்று உணர்ந்தபொழுது அவளுக்கு பன்னிரண்டு வயது. ஓருநாள் எல்லோரும் இருக்க “அம்மா, நான் ஒரு பெண் என்று நினைக்கிறேன்” என்றாள். சுற்றி இருந்தவர்கள் “டேய் அக்ஷய் , ஏன்னடா இது புது விளையாட்டு” என்று சிரித்துவிட்டு அமைதியாகிவிட்டர்கள். அவளும் ஒன்றும் புரியாதவளாய் விட்டுவிட்டாள்.
பின்பு ஒரு வருடம் கழித்து அவள் உடல் மற்றும் பாவனைகளில் மாற்றம் தெரிய அவர்களுக்கு விஷயம் புரிய ஆரம்பித்தது. அவளது அம்மா, “நான் என்ன பாவம் செய்தேன், கடவுள் எதுக்கு என்னை இப்படி தண்டித்தான்”, என்று நெஞ்சை அடித்திக் கொண்டு கதறினாள். அம்மாவும் பெண் தானே. பின் ஏன் அதை தண்டனையாக கருதுகிறாள் என்று குழம்பினாள் அக்ஷயா. அன்று முதல் அவள் தாய் இதுவரை அவளிடம் பேசியதில்லை.
உறவுக்காரர்கள் அவளை தொலைத்துவிட யோசனை கூற, அப்பாவிற்கு அதில் உடன்பாடு இல்லை. பல தொண்டு நிறுவனங்களை நடத்தி வரும் அவர் மனது, அவர்களின் கருத்தை ஏற்க மறுத்தது. வீட்டிலே அவளை வளர்த்தாலும் சுற்றி இருக்கிறவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து, தனி வீடு வாங்கி, செவிலியரை அமைத்து படிக்க வைத்தார்.