2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு "முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா? - வத்சலா
சந்தோஷமாய் கலகலத்தன லாவண்யா கையில் இருந்த அந்த இரண்டு கொலுசுகளும். இன்னொரு முறை ஆட்டிப்பார்த்துக்கொண்டாள் அதை. அவள் மனமும் கூட அந்த கொலுசுகளை போலவே கலகலத்துக்கொண்டிருந்தது.
இருக்காதா என்ன? ஒரு மாதம். மொத்தமாய் முப்பது நாட்கள் பிரிவுக்கு பிறகு இன்று கணவன் ஷிவாவை பார்க்க போகிறாள் என்றால் மகிழ்ச்சி இருக்கத்தானே செய்யும். சந்தோஷ சிரிப்புடன் அந்த கொலுசுகளை அணிந்துக்கொண்டாள் லாவண்யா. ஷிவாவுக்கு கொலுசுகள் மிகவும் பிடிக்கும்.
‘எதுக்கு அதை கழட்டி கழட்டி வைக்குற?’ என்பான். ‘எப்பவும் அந்த சத்தம் என் காதிலே கேட்டுட்டே இருக்கணும்’
‘ஜீன்ஸ் போட்டுட்டு போகும் போதெல்லாம் எப்படி கொலுசு போடறது? இவள் சிணுங்க
‘அதெல்லாம் போடலாம் போடு’ என்பான் விடாமல்.
அதிலே என்ன சந்தோஷம் உங்களுக்கு?’ கேட்பாள் இவள்.
‘அது..... நான் வேறே யாரவது பொண்ணுங்களோட போன்லே. சீக்ரெட்டா ஏதாவது பேசிட்டு இருப்பேன் அப்போ நீ திடீர்னு வந்து நின்னா என்ன பண்றது? நீ வர்றதுக்கு முன்னாடியே உன் கொலுசு சத்தம் கேட்டா நான் கொஞ்சம் அலெர்ட் ஆயிடுவேன் இல்ல’ என்று வேண்டுமென்றே இவளை வம்புக்கு இழுத்து தலையணையால் அடி வாங்குவான் அவன்.
பின்பு ஒரு நாள் அவன் மார்பில் இவள் சாய்ந்து கிடந்த ஒரு இனிமையான தருணத்தில்தான் சொன்னான் அவளது கொலுசுகள் மீதான அவன் காதலுக்கான காரணத்தை.
‘அது ஒரு ஃபீல்டி ராஜாத்தி. வீட்டிலே நாம ரெண்டு பேர் மட்டுமே இருந்தா அப்படியே ரொமான்ஸ் பண்ணிட்டு நான் உன் பின்னாடியே சுத்திட்டு இருக்கலாம். இப்போ இங்கே அப்பா, அம்மா கல்யாணம் ஆகாத தங்கச்சி எல்லாம் இருக்காங்க. ஸோ நீயும் அடிக்கடி பக்கத்திலே வர முடியாது. ஆனா நீ வீட்டுக்குளே எங்கே இருந்தாலும் உன் கொலுசு சத்தம் எனக்கு கேட்டுட்டே இருக்கும் போது அது உன் அருகாமையை எனக்கு உணர்திட்டே இருக்கும்டி.’ என்றபடியே கொடுத்தான் ஒரு அழுத்தமான முத்தத்தை ‘நீ என் பக்கத்திலே இருக்கிறது எனக்கு அவ்வளவு சந்தோஷம்’
ஷிவாவுக்கும் அவளுக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைய போகின்றன. பெரியோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம்தான். திருமணத்தில் எல்லாம் பெரிய நாட்டம் இருந்ததில்லை லாவண்யாவுக்கு. பெற்றவர்களுக்காக மட்டுமே அவனை மணந்துக்கொண்டு அவனோடு வாழ ஆரம்பித்தாள் லாவண்யா.
ஆனால் இந்த இரண்டு வருடங்களுக்குள் அவனுக்குள் எப்படி உருகி கரைந்து போனாள் என்பது இவளுக்கே புரியாத புதிர்தான். அலுவலக விஷயமாக அவன் வெளிநாடு சென்ற இந்த ஒரு மாதத்தை பிடித்து தள்ளாத குறையாகத்தான் கழித்து இருக்கிறாள் லாவண்யா.
‘ராஜாத்தி..’ இப்படிதான் அழைப்பான் அவளை. முதலில் அது ஏனோ அவளுக்கு பிடிக்கவே இல்லை.
‘என்னதிது ராஜாத்தி? பழைய காலத்திலே கூப்பிடுற மாதிரி இருக்கு. இப்போ எல்லாரும் எப்படி எப்படி எல்லாம் செல்ல பேர் வெச்சு கூப்பிடுறாங்க பொண்டாட்டியை’ அவனிடம் சிணுங்கி இருக்கிறாள் அவள்.. இருந்தாலும் மாற்றிக்கொள்ளவில்லை அவன்.
‘எவன் வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் கூப்பிடட்டும். எனக்கு நீ ராஜாத்திதான்’.
யார் இருந்தாலும், எல்லார் முன்னாலும் எப்போதும் அவளை ராஜாத்தி என்றே அழைப்பான் அவன். போகப்போக அந்த ராஜாத்தியே அவளுக்கு மிகவும் பிடித்துப்போனது.
அவன் மட்டும் இல்லாது அவனது அம்மா, அப்பா, தங்கை என அனைவருமே இவள் மீது பாசத்தை பொழிந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
கண்ணாடியில் தன்னை ஒரு முறை பார்த்துக்கொண்டாள் லாவண்யா. ‘எப்போதும் இருப்பதை விட இப்போது முகத்தில் இன்னும் கொஞ்சம் அழகு கூடி இருக்கிறதோ?’ நினைத்தவள் தனக்குத்தானே சிரித்துக்கொள்ள
‘ஆங்.. போதும்.. போதும்... நினைப்புதான் பொழப்பை கெடுக்கும். கிளம்பு கிளம்பு..’ அவள் மனம் படித்தவளாக அவளை செல்லமாக விரட்டினாள் இவளது அறைக்குள் நுழைந்த அவனது தங்கை ஷாலினி. அவளுக்கும் இவளுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது என்பதால் இருவருக்குள்ளும் அழகாய் பூத்து கிடந்தது ஒரு நட்பு.
குடும்பத்தினர் அனைவரும் விமான நிலையம் சென்று அவனை அழைத்து வருவதாக திட்டம்.
‘எதுக்கு எல்லாரும் வரீங்க? இவ்வளவு தூரம் வரவனுக்கு வீட்டுக்கு வர வழி தெரியாதா?’ ஷிவா இரண்டு நாட்களுக்கு முன் தொலைப்பேசியில் சொன்ன வார்த்தைகளை யாரும் கேட்பதாக இல்லை,
எல்லாரும் கிளம்பியாகி விட்டது. அவன் அப்பாவும் அம்மாவும் பின்னால் அமர்ந்திருக்க, ஷாலினி அவளருகில் அமர்ந்திருக்க ஒரு சந்தோஷ படபடப்புடனே காரை செலுத்திக்கொண்டிருந்தாள் லாவண்யா.
நிஜமாகவே அவன் இவளை பெண் பார்க்க வந்த போது கூட இத்தனை படபடப்பு அவளுக்குள் இருக்கவில்லைதான். இந்த ஒரு மாத பிரிவு அவளுக்குள் அத்தனை தவிப்பை விதைத்திருந்தது என்றே சொல்ல வேண்டும்.