சுந்தரமும் அரசு ஊழியர்தான். இரண்டு பையன்கள் அவருக்கு. இருவரும் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால் அவர் மனைவி இருதய நோயாளி என்பதால் அவருக்கு செலவு அதிகம். எனவே எப்பொழுதாவது இப்படிக் கடன் கேட்பது வழக்கம்தான்.
'அதுக்கென்ன சுந்தரம் இரு இதோ வந்திர்றேன்" என்றபடி உள்ளே சென்றார்.
அப்பொழுது ஆனந்தனும். ஹேமலதாவும் கூட ஒன்றாக வீடு திரும்பி விட்டனர்.
கோவிநதன் 'இந்தாப்பா சுந்தரம் போதுமா இல்ல இன்னும் வேணுமா?" என்றபடியே இருபதாயிரத்தை சுந்தரத்திடம் நீட்டினார்.
'இல்லப்பா இது போதும் ரொம்ப தேங்க்ஸ்ப்பா. அப்ப நான் வர்ரேன்" என்றபடி கிளம்பினார் சுந்தரம்.
'என்னங்க காய்கடைக்கு போகணும் பணம் கொடுக்கிறீங்களா?" தயங்கியபடியே கேட்டாள் சுமதி.
'என்ன முந்தாநாள்தான முன்னூறு ரூபாய் கொடுத்தேன். அதுக்குள்ள எல்லாம் செலவு ஆயிடுச்சா? தண்டம் பார்த்து செலவு செய்யத் தெரியுதா உனக்கு. எப்பப் பாரு பணம் பணம்னு அரிச்செடுக்க வேண்டியது" பொரிந்தார் கோவிந்தன்.
கண்களில் திரண்ட கண்ணீர் வெளியே வராமல் இருக்க பெரும் முயற்சி செய்ய வேண்டி இருந்தது சுமதிக்கு. அக்கண்ணீர் வெளிவந்தால் அதற்கும் சேர்த்து திட்டு வாங்க வேண்டி இருக்கும். எனவே கண்ணீரை உள் வாங்கி விழுங்கினாள். முப்பது வருடப் பழக்கம் அல்லவா?
கோவிந்தன் நல்லவர்தான். ஆனால் என்ன மனைவியிடம் மட்டும் அன்பை வெளிப்படுத்த தெரியாது. அது காலங்காலமாக பழக்கப்பட்டதா அல்லது பரம்பரைப் பழக்கமா எதனால் என்றெல்லாம் தெரியாது. அதட்டியேதான் பேசுவார். பணம் கேட்கும்பொழுது எல்லாம் இரண்டு திட்டு திட்டிவிட்டுத்தான் கொடுப்பார். ஒவ்வொரு முறையும் சுமதி கூனிக்குறுதித் தான் போவாள்.
இப்பொழுது இருக்கும் விலைவாசியில் சுமதி எவ்வளவு சிக்கனமாகத் தான் செலவு செய்வாள் என்றாலும் முன்னூறு ரூபாய் இரண்டு நாட்களுக்கு செலவுக்கு போதும். அதையும் தாண்டி எப்படி வரும்? என்ன சொல்வதென தெரியாமல் அமைதியாக நின்றாள்.
"அப்பா!!" வேகமாகக் கூப்பிட்டபடியே உள்ளிருந்து ஹேமலதா வந்தாள்.
'என்னம்மா!" அவளைப் பார்த்தார் கோவிந்தன்.
'ஏய் அம்மு நீ பேசாத உள்ள போ" என்றாள் சுமதி
'நீ பேசாம இரும்மா எத்தனை நாளைக்கு ம்ஹும் எத்தனை வருசத்துக்குத் தான் நீ இப்படியே இருப்ப? நான் இன்னைக்கு கேட்காம விட மாட்டேன். அதற்குள் ஆனந்தனும் வந்து விட்டான் 'ஹேமா பேசாம இரு" என்றான்.
'போ அண்ணா நீயும் பேசமாட்ட அம்மாவும் பேசமாட்டேங்குது . என்னையாவது பேச விடுங்க" என்றவளைப் பார்த்த கோவிந்தன்
'என்ன என்னப் பேசப் போற சொல்லு" என்றார் கோவிந்தன். அவருக்குப் படபடப்பாக வந்தது. இத்தனை வருடங்களில் வீட்டில் யாரும் அவரை எதிர்த்துப் பேசியதில்லை.
'அப்பா நீங்க எங்களுக்கு நல்ல அப்பா. உங்க அப்பா அம்மாவிற்கு நல்ல மகன். உங்க சொந்தபந்தங்களுக்கு நல்லவர்தான். உங்க ஃபிரெண்ட்ஸ்க்கெல்லாம் நல்ல ஃபிரெண்டுதான். எல்லாமே கரெக்டாதான் இருக்குது. ஆனால் அம்மாவுக்கு நல்ல புருசனா எப்பவாவது இருந்திருக்கீங்களா?"
'ஏய் என்ன நீ? நான் உங்க அம்மாவை சாப்பாடு துணிமணி இல்லாம கொடுமைப்படுத்தினது மாதிரி பேசறியே?".
'இல்லப்பா சாப்பாடு துணிமணி மட்டும் வாங்கிக் கொடுத்துட்டா போதுமா அப்பா?
'கோவிந்தனுக்கு புரியவிலலை. இன்னும் என்ன வேணும் உங்க அம்மாவிற்கு. நகை நிறைய வேணுமா என் வருமானத்தில என்ன முடியுமோ அதைத்தான் கொடுக்க முடியும். நீ நினைக்கிற மாதிரி நூறு பவுன் எல்லாம் வாங்கிக் கொடுக்க முடியாது. பங்களாவுல குடி வைக்க முடியாது" என்று பதில் கூறினார் கோவிந்தன்.
'அப்பா நீங்க என்னப்பா? நூறு பவுன் பங்களா இதெல்லாம் வாங்கிக் கொடுத்தாதான் நல்ல புருசனா? இல்லப்பா. இதெல்லாம் இல்லாமேயே சந்தோசமாக இந்த உலகத்திலேயே நல்ல புருசன்னு பேர் வாங்கலாம்ப்பா. ஆனா அதுக்குத் தேவை மனசுதான். பணம் இல்ல."
'இப்ப நீ என்ன சொல்ல வர்ற" புரியாதவராகக் கேட்டார் கோவிந்தன். 'என் அப்பா என் தாத்தா எல்லாரும் எப்படி இருந்தாங்களோ எப்படி குடும்பம் நடத்தினாங்களோ அப்படித் தான் நானும் இருக்கறேன"; என்றார்.
'ஏம்ப்பா இப்ப உங்க ஃபிரெண்ட் சுந்தரம அங்கிள் கிட்ட பணம் கொடுத்திங்களே ஏதாவது கேள்வி கேட்டீங்களா அவரை? இல்லல்ல. அட்லீஸ்ட் எப்ப திருப்பி தருவன்னு கூடக் கேட்காமத் தான இருபதாயிரத்தைத் தூக்கி கொடுத்தீங்க" தன்னைத் தடுத்த அண்ணனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் தொடர்நதாள் ஹேமலதா.