ன்னு சிரிச்சான். பூஜை மந்திரம் சொல்றபோது ஒரே தடுமாற்றம். எனக்கு ஆத்திரமா வந்தது, கஷ்டப்பட்டு அடக்கிண்டேன், அதை அந்த அயோக்கியன் என் சம்மதமா நினைச்சிண்டு, என்மேலே கையை வைச்சுட்டான்! இதுக்குமேலே மரியாதை கொடுத்தா, ஆபத்துன்னுதான் தாம்பாளத்தாலேயே அவன் தலையிலே மொத்து மொத்துனு போட்டேன், நீங்க வந்ததும் ஓடிட்டான் ராஸ்கல்!"
லீலா பத்ரகாளிமாதிரி ஆவேசமா நின்றுகொண்டிருந்தாள்.
" லீலா! கிடக்கிறான், விடு! நீ போட்ட அடியிலே இனிமே எந்த பெண்ணையும்ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். ஆமா, உனக்கிருக்கிற விவேகத்துக்கு, நீ வேறமாதிரி, சாஃப்ட்டா, ஆனா, உறுதியா, எச்சரித்து அனுப்பியிருக்கலாமோன்னு நினைக்கிறேன், அறுபது வயசு! ஏதோ சபலம்! உன் அழகிலே கிறங்கிட்டான், எல்லாரையும் போல!"
"ரகு! நான் இப்ப அவனுக்கு கொடுத்த தண்டனைதான் ரொம்ப சாஃப்ட்! இங்கே நடந்தது, வெளியிலே வேற யாருக்கும் தெரியாது! நானும் சொல்லமாட்டேன். அவன் பிழைப்பை கெடுக்கவில்லை. அவன் திருந்த சந்தர்ப்பம் கொடுத்திருக்கிறேன்..........."
" அப்படியா சொல்றே?"
" விவரமா சொல்றேன், இப்ப நான் அவனை அடிக்காம, கண்டிச்சி விட்டு, நேரே அவன் வீட்டுக்குப் போய் அவன் மனைவி, பிள்ளைகளிடம் சொல்லியிருந்தால், அவர்களும் என்னுடன் சேர்ந்து அவனை ஏறிமிதித்து நசுக்கியிருப்பார்கள், ஊர்முழுதும் பரவி, ஊர்மக்களும் அவன் முகத்தில் காரி உமிழ்ந்திருப்பார்கள், அவமானம் தாங்கமுடியாமல் அவன் தன் முடிவை தேடிக்கொண்டிருப்பான், இல்லையா?"
இத்தனை விவேகம் உள்ளவள் அப்படி ஒரு தவறான முடிவுக்கு எப்படி வந்தாள் என்று எனக்கு விளங்கவேயில்லை!
என் லீலா என்மீது தன் உயிரையே வைத்திருப்பவள்! எனக்காக எதையும் செய்வாள்! எனக்காகவே வாழ்பவள்! அப்படி இருக்கையில், தற்கொலை செய்துகொள்ள எப்படித் துணிந்தாள்?
அவள் அபிப்பிராயத்தில், பொதுவாகப் பெண்கள் ஆழமாக சிந்திக்காமல், சுலபத்தில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்! வெளிச்சத்துக்கு இரையாகும் மின்மினிப் பூச்சிகள்.
வம்பு பேசுவதில் சுவை காண்பவர்கள்! பாரம்பரிய அடிமைத்தனத்தில் ஊறித் திளைப்பவர்கள். இன்னமும், சுயமாக சிந்திக்க மறுப்பவர்கள்!
சுபாவங்களில், தனக்கு நேரிடையானவர்கள், அவர்களுடன் நெருங்கிப் பழகுவது இயலாத ஒன்று என பிடிவாதமாக ஒதுங்கி வாழ்பவள்!
அவள் அப்படி நினைத்ததில் எந்தத் தவறுமில்லை என்பது, நானும் அவளும், என் நண்பன் ஒருவனின் மனைவியின் வளைகாப்பு, சீமந்தம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, வெட்ட வெளிச்சமாகியது!
அந்த நண்பனும் நானும் சிறுவயதிலிருந்து நண்பர்கள். படிக்கும்போதும் ஒரே பள்ளி, கல்லூரியில் படித்தவர்கள். அவனும் அவன் மனைவியும் என் வீட்டுக்கும், நானும் லீலாவும் அவன் வீட்டுக்கும் அடிக்கடி வந்து,போகிறவர்கள்!
பொதுவாக எந்த நிகழ்ச்சிக்கும் போகாத நாங்கள், அந்த நிகழ்ச்சிக்கு நண்பனின் வற்புறுத்தலால் சென்றோம். திருமணமாகி பத்து வருடங்கள் கழிந்து தற்போது கர்ப்பம் தரித்திருக்கிறாள், அவன் மனைவி! பூரிப்பில் நடத்துகிற நிகழ்ச்சியில், நாங்கள் கலந்துகொள்ளாவிடில், இருவரும் நிகழ்ச்சியையே தவிர்ப்போம் என கூறியதால், லீலாவும் நானும் நிகழ்ச்சிக்குச் சென்றோம்.
ஒப்புக்கு கலந்துகொண்டுவிட்டு திரும்பிவிடலாம், நிகழ்ச்சியில் எந்தவித பங்கும் எடுத்துக்கொள்ளவேண்டாம் என தீர்மானத்துடன் சென்றோம்.
நண்பனின் மனைவியோ, லீலாவை தன் அருகிலேயே துவக்கத்திலிருந்து இறுதிவரை இருக்கும்படி கட்டாயப்படுத்தினாள்.
" இது எனக்கான நிகழ்ச்சி! நீ என் ஆருயிர் தோழி! எந்த நாய் என்ன குரைத்தாலும், கவலையில்லை! லீலா! நீ என்னருகிலேயே இருக்கவேண்டும்."
லீலாவின் உள்ளுணர்வு எச்சரித்தது. தர்மசங்கடமான நிலையில் புழுவாய் நெளிந்தாள்.
பயந்தபடியே நடந்துவிட்டது.
அந்த நிகழ்ச்சிக்கு புரோகிதர், யார் தெரியுமோ? லீலாவிடம் அடிவாங்கிய அதே அறுபது வயது புரோகிதர்!
அவர் லீலாவை பார்த்ததுமே, எங்கே லீலா அவரை காட்டிக்கொடுத்துவிடுவாளோ என பயப்படவில்லை, மாறாக, லீலாவை பழிவாங்க, சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்.
ஆமாம், அங்கிருந்த வயதான ஆண், பெண் இருபாலாரிடமும் " லீலா ஒரு மலடி! கல்யாணமாகி பத்து வருஷமாகியும் இன்னும் அவள் வயிற்றில் புழு, பூச்சி வைக்கலை! அவ இங்க இருக்கிறது, அபசகுனம்! அவளை முதல்லே, வெளியே விரட்டுங்க!"என தூபம் போட்டார்.
அது கொழுந்துவிட்டு எரிந்து, என் நண்பனின் மனைவியின் காதில் விழுந்ததும், அவள் பத்ரகாளியாய் மாறினாள்!
" லீலா என்னுடன், என்னருகில், நெருக்கமாக இந்த நிகழ்ச்சியில் இருப்பாள். இதை விரும்பாதவர்கள், என்னைப் பெற்றவர்கள் உட்பட, யாராயிருந்தாலும், தாராளமாக வெளியேறலாம், முதல்லே இந்த புரோகிதர் வெளியேறலாம்!"