(Reading time: 8 - 15 minutes)

சிறுகதை - எமக்குத் தொழில் பிச்சை! - ரவை

beggar

"மக்கு தொழில் கவிதை,

 நாட்டுக்குழைத்தல்,

 இமைப்பொழுதும் சோராதிருத்தல்

 உமைக்கினிய மைந்தன் கணநாதன் நம்குடியை வாழ்விப்பான்,

 சிந்தையே இம்மூன்றும் செய்!"

 மகாகவி பாரதியின் பொன்னான வார்த்தைகள்! 

 என்னால் கவிதை எழுதமுடியாது, ஏனெனில், படிப்பறிவு கிடையாது!

 நாட்டுக்கு உழைக்கமுடியாது, ஏனெனில் நான் ஒரு முடவன்!

 இமைப்பொழுதும் சோராதிருக்க முடியாது, ஏனெனில், பசி முற்றும்போது, உறக்கமே மருந்து!

 ஆனால், பாரதி கூறியதுபோல, என்னை வாழ்விப்பது 'உமைக்கினிய மைந்தன்' கணநாதனின் இளையவன் கந்தன்!

 அதனால், எனக்குத் தொழில் பிச்சை! கந்தகோட்டத்தின் வாயிலில் அமர்ந்தபடி கையேந்துவதே!

 த்தூ! கேவலமாயில்லையா? என்று நீங்கள் காரி உமிழ்வது, காதில் விழுகிறது! நல்லவேளை, கால்களை முடக்கிய கந்தன், காதுகளை முடக்கவில்லை!

 நான் பிறந்தது ஒரு டாடா, பிர்லா குடும்பத்தில் அல்ல; ஒரு பிச்சைக்கார குடும்பத்தில், அதுவும், முடவனாக! 

 கைகளையே கால்களாக பயன்படுத்தி வெகுதூரம் பயணிக்க முடியுமா

 அதனால், கந்தன் கோவில் வாசலே, என் உறைவிடம்!

 பைந்தமிழ் எனக்குத் தந்தவன், தமிழ்க் கடவுள், கந்தன்!

 நம்பமாட்டீர்களா? காளிதாசனை, பேசவைத்துப் பாடவைத்தது, காளி!

 முடவனுக்காக காத்திருந்தாள், காவிரித் தாய்!

 காமுகனை அருணகிரிநாதராக்கினார், கந்தவேள்!

 இதையெல்லாம் நம்புவீர்கள், நான் சொல்வதை நம்பமாட்டீர்கள், ஏன் தெரியுமா? நான் உங்களுடன் சமகாலத்தில் வாழ்கிறேன்!

 விட்டுத் தள்ளுங்கள்! ஒரு வெண்பா எழுத முயற்சிக்கிறேன், கந்தன் அருளை நம்பி!

எமக்குத்தொழில்பிச்சை,கந்தன்அடிபணிதல்,

தமிழ்கவிதைபுனையமுயற்சித்தல்-உமைக்கினிய

மைந்தன்கந்தவேள்வாழ்விப்பான்,

சிந்தையேஇம்மூன்றும்செய்!

 எப்படி? சூப்பர் இல்லே? இல்லையா!

 சரி விடுங்க! என் வாழ்க்கை எப்படி போகுது, நான் சந்தோஷமாயிருக்கேனான்னு கேட்கமாட்டீங்களா?

 நானே சொல்றேன்!

எனக்கு ஒரு குறையுமில்லே! என்ன, நம்பமுடியலியா

 யாருக்கு குறையிருக்கும்? எதிர்பார்த்தது கிடைக்கலேன்னா, குறையிருக்கும்!

 எனக்குத்தான் எதிர்பார்ப்பே கிடையாதே, ஏன் தெரியுமா? எனக்கு தேவையே கிடையாதே! என்னப்பன் கந்தன் நான் கேட்காமலே அள்ளி அள்ளித் தருகிறான், நான் கேட்காமலே தருகிறான், எனக்கேது குறை?

 வாழ்க்கை சந்தோஷமா போகுது! பணம் வைச்சிருக்கிறவன், பங்களாவிலே வாழறவன், பெண்டாட்டி குழந்தைங்க உள்ளவன், பெரிய பதவியிலே இருக்கிறவன், கட்சித்தலைவன், இவங்களை கேளுங்க! நிம்மதியா ஒருநாள்கூட தூங்கமாட்டாங்க! ஏன்னா, இருக்கிறதை நினைக்காம, இல்லாத ஒன்றுக்கு ஏங்கறதனாலே!

 நான் பிறந்ததும், வளர்ந்ததும், வாழறதும், நிறைவாயிருக்கு! பொய் சொல்லலே, சில நாட்கள் ஒரு வேளைக்குத் தான், வயிறாரும், மற்ற நேரத்தில் பசி வயிற்றைக் கிள்ளும். அப்போதெல்லாம், நீங்கள் உணவுக்காக அலைவீர்கள், ஏங்குவீர்கள்! 

 நான், மாறாக, அந்த ஒரு வேளை உணவைத் தந்த என்னப்பன் கந்தனை நன்றியுடன் நினைத்துக்கொண்டிருப்பேன். பசி எடுக்கவில்லையே, என பெரிய பணக்காரங்கள்ளாம் டாக்டர்கிட்ட ஓடிப்போய் மருந்து சாப்பிடுவாங்க! எனக்கு அந்தச் செலவே இல்லாமல் பசியை தருகிற கந்தனின் கருணையை நினைத்தாலே, பசி மறந்துபோகும்.

 என்னடா இவன், எடுத்ததுக்கெல்லாம், என்னப்பன் கந்தன்னு சொல்றானே, பெரியபக்திமானோ என்று தப்புக்கணக்கு போடாதீர்கள்! 

 உங்களுக்கு, சம்பளம் தருகிற முதலாளி எப்படியோ, அந்த அளவுக்குத்தான், எனக்கு என்னப்பன் கந்தன்!

 அவனுக்காக, நான் ஒருவேளைகூட விரதம் இருந்ததில்லை! ஒரு கற்பூரம் ஏற்றியதில்லை! ஏன், ஒருவேளைகூட, என்னப்பன் கந்தனைப் பார்க்க கோவிலுக்குள் நுழைந்ததில்லை! 

 நான் கோவிலுக்குள்ளே போவதை ஏற்காத நாத்திகனில்லை, நான் எப்போதோ ஒருமுறை குளிப்பவன், சுத்தமாயில்லாதவன், நான் கோவிலை அசுத்தப்படுத்த விரும்பவில்லை!

 எப்போதோ ஒருமுறை குளிப்பேன் என்றேனே, எப்படி என்று கேட்கமாட்டீங்களா? கேட்டால், ஒரு சுவையான கதை கிடைக்கும்!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.