என் முகத்தில் தெறித்த ஆச்சரியத்தை கவனித்துவிட்டாள்.
" ஏன்யா! நான் வரமாட்டேன்னு நினைச்சியா?"
நான் சிரித்து மழுப்பினேன்.
" ஏதோ இருந்ததை எடுத்தாந்தேன், சாப்பிடு!"
தட்டில் இருந்தது, ஆறு இட்லி!
அவள் முகத்தைப் பார்த்தேன்.
" ஏன்யா! பத்தாதா? அவ்வளவுதான்யா இருந்தது......."
" பத்தாதா? இதுவரை இத்தனை இட்லி ஒரு நேரத்திலே நான் சாப்பிட்டதேயில்லை!"
" நீ பொய் சொல்றே!"
" இல்லைம்மா! சத்தியமா சொல்றேன்!"
" ஏன்யா, நான் உனக்கு அம்மாவா?"
அவள் கேள்வி சட்டென எனக்குப் புரியவில்லை!
" இல்லே, என்கூட பேசறபோது, இல்லேம்மான்னு 'அம்மா' ங்கிறியே! என் பேரு, வள்ளி!"
எனக்கு உடல் சிலிர்த்தது!
ஏன் தெரியுமா? என்னப்பன் கந்தன் என்னை கவனித்துக்கொள்ள, வள்ளியையே அனுப்பிவைத்திருக்கிற கருணையை நினைத்தேன்!
கண்கள் குளமிட, அவள் காலில் விழுந்தேன்!
" நீ ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், எனக்கு நீ தாய்தான்! ஏன் தெரியுமா? கந்தன் என் அப்பன் என்றால், வள்ளி என் தாய்தானே!"
அவள் போனபிறகு, எனக்குள் ஒரு குறுகுறுப்பு! கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், உடனே செயலில் இறங்கினேன்.
வழக்கம்போல, எனக்கு டீ, வடை, குடிநீர் கொண்டுவந்த பையனிடம் அவன் பெயரைக் கேட்டேன்.
" சுப்பிரமணி!"
என் உடலில் மின்சாரம் பாய்ந்தது.
" சுப்பிரமணி! டீ கடை முதலாளி பெயர் என்னப்பா?"
" வேலன் நாயர்!"
இதற்கு மேலும் ஆதாரம் தேவையா?
" கந்தா! உன்னை அனாதரக்ஷகன்னு பாடி வைச்சிட்டுப் போனவங்க, பொய் சொல்லலே!"