சிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........! - ரவை
" இது உன் குழந்தையா? இதுக்கு இருதயத்திலே கோளாறு! குழந்தையை காப்பாத்த, மூணு லட்ச ரூபா செலவாகுமே, உன்னாலே முடியுமா? யோசனை பண்ணிச் சொல்லு!"
டாக்டர் நகர்ந்தபிறகு, குழந்தையின் தாயும் தந்தையும் திருதிருவென விழித்தனர்.
அதை கவனித்த நர்ஸ், " டாக்டர் என்ன சொன்னார்னு புரியலையா? உங்க குழந்தைக்கு வயத்திலே வியாதி இருக்கு, அதுக்குப் பேரூ புற்றுநோய்! இதை சரிப்படுத்த மூணுலட்ச ரூபா செலவாகும்........"
" லட்சமா? அப்படீன்னா?"
நர்ஸ் சிரித்தாள். பாவம்! அவர்கள் இருவரும் வயலில் கூலிக்கு வேலை செய்து பசிக்கு உணவு தேடிக்கொள்ளும் குடியானவர்கள். கிராமத்தில், சேரியில் வசிப்பவர்கள்! படிப்பறிவில்லாதவர்கள்! பணத்தை பார்க்காதவர்கள். அவர்களுடைய அன்றாட தேவைகளை, வயலுக்கு சொந்தக்கார மிராசுதார் கவனித்துக்கொள்கிறார்.
" நீங்க போய் உங்க எசமானை வந்துபார்க்கச் சொல்லுங்க! அவர்கிட்ட நான் சொல்றேன், அவர் புரிஞ்சிப்பார்! போங்க, உடனே அவரை கூட்டியாங்க!"
" எங்க புள்ளை.......?"
" அது இங்கேயே இருக்கட்டும், நான் கவனிச்சிக்கிறேன்......."
அப்பாவிகள் இருவரும் தங்கள் குழந்தையை திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றனர்!
"ஐயா! .........."
" என்னாச்சுடா, கொழந்தை எங்கே?"
" ஆசுபத்திரில இருக்கு, அவங்க சொல்றது எனக்கு புரியல, உங்களை கூட்டியார சொன்னாங்க........"
" அப்படியா! இரு, நம்ம கணக்குப்பிள்ளையை அனுப்பறேன்...."
சிறிது நேரத்தில் கணக்குப்பிள்ளையுடன் ஆஸ்பத்திரிக்கு திரும்பினர்.
நர்ஸ், டாக்டர் சொன்னதை, கணக்குப்பிள்ளையிடம் தெரிவித்தாள்.
"மூணுலட்சமா? அவ்வளவு பெரிய தொகைக்கு ஐயா எங்கே போவாரு? இப்பல்லாம் வயல்லே விளைச்சலே இல்லை, மழை பெய்யலை, அரசாங்கமும் உதவி செய்யலே, தண்ணியும் திறந்துவிடலை, கொள்முதலும் சரியில்லே, வரவேண்டிய பணமும் வரலே..........."
" அப்ப ஒண்ணு செய்யுங்க! இது ரொம்ப சின்ன ஆஸ்பத்திரி! இங்கே சின்ன வியாதிகளுக்குத்தான் வைத்தியம் செய்யமுடியும். அதனாலே, இங்கிருந்து தஞ்சாவூர் போங்க! அங்கே அரசு மருத்துவமனையிலே கொழந்தையை சேர்த்துடுங்க, சிகிச்சை முடிய மூணுநாலு மாசமாகும், அதுவரையிலும் அங்கேயே தங்கியிருக்கணும், கிளம்புங்க உடனே, கொழந்தையை தூக்கிக்கிட்டு!"
நால்வரும் திரும்பி வந்து எசமானைப் பார்த்தனர். அவரிடம் விவரங்களை தெரிவித்தனர்.
அவருக்கு என்ன செய்வதென புரியவில்லை!
" சரி, கொழந்தையை தூக்கிட்டு தஞ்சாவூர் போங்க, வழிச் செலவுக்கு பணம் தரேன், ஆனா, அங்கே, நீங்க ரெண்டு பேரும் சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க?"
இருவரும் பதில் தெரியாமல் விழித்தனர்.
" சரி, எனக்கு தெரிந்த ஒருத்தருக்கு கடுதாசு எழுதித் தரேன், அவர் வீட்டுக்கு நேரே போயிடுங்க, அவர் மத்ததை பார்த்துப்பாரு, சரியா?"
இருவரும் தலையசைத்தனர். கணக்குப்பிள்ளை, அவர்களிடம் வழிச்செலவுக்கு கொடுத்த பணத்துடனும் எசமான் நண்பருக்கு எழுதிய கடித்த்துடனும் இருவரும் பேருந்து நிலயம் வந்து, பஸ் பிடித்து தஞ்சாவூர் வந்து சேர்ந்தனர்.
இருவரும் குழந்தையுடன் பஸ்ஸிலிருந்து இறங்கி தயங்கி நிற்பதை ஒரு ஜோடி கழுகுக் கண்கள் பார்த்துவிட்டன!
"வாங்க! ஊருக்கு புதுசா? பயப்படாதீங்க! நான் உதவி செய்யறேன், என்கூட வாங்க!"
மூவரையும் ஓரிடத்தில் அமர்த்திவிட்டு, "சொல்லுங்க, எங்கே போகணும்? யாரை பார்க்கணும்? புள்ளை ஏன் அழுதுகிட்டேயிருக்கு?"
" கொழந்தைக்கு பசி! பால் கொடுத்தா, அழாது.........."
" கையிலே என்ன காகிதம்?"
குழந்தையின் தந்தை, கையிலிருந்த கசங்கிய காகிதங்களை நீட்டினான்.
அவைகளில், ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்று, இன்னொன்று, மிராசுதார் அவருடைய நண்பருக்கு எழுதிய கடிதம்!
இரண்டில் எது பணம், எது கடிதம் என்பதுகூட கிராமத்தானுக்கு தெரியவில்லை என்பதை புரிந்துகொண்ட, தஞ்சாவூர் கழுகுக்கு சந்தோஷம் எல்லை மீறியது!
" இத பாருங்க! முதல்லே, அதோ தெரியுதே, டீக்கடை, அங்கே போய் புள்ளைக்கு பாலும், உங்களுக்கு டீயும் வாங்கிவரேன்! அதை குடிச்சபிறகு, உங்களை நானே நீங்க பார்க்கவேண்டியவர் வீட்டுக்கு அழைச்சிகிட்டு போறேன்.." என்று கூறிவிட்டு, கடித்த்தை மட்டும் கிராமத்தான் கையில் திணித்துவிட்டு, ஐம்பது ரூபாய் பணத்துடன், விசிலடித்துக்கொண்டே, காற்றில் மறைந்தான்!