சிறுகதை - நட்பு என்பது... - ஜெப மலர்
ஏய் ஜனனி.. இப்படியே எத்தனை நாள் இருப்ப. வாக்கப்பட்டு வந்த நாள்ல இருந்து கஷ்டத்தை மட்டுமே பார்த்துட்ட.நல்ல புருஷனா இருக்கலனாலும் ஆம்பிளைனு துணைக்காவது இருந்தான். அவனும் போய் சேர்ந்து ஒரு வாரம் ஆய்ட்டு.தனிமனுஷியா எப்படி தான் பொம்பள பிள்ளையை வளர்க போறியோ. என்னத்த சொல்ல.. கடவுள் இருக்கிறான்... என்று புலம்பிய படியே வந்திருந்த கடைசி சொந்தமான செல்லத்தா பாட்டியும் வெளியேறினார்கள்..
ஜனனியின் கணவன் இறந்த இந்த ஒரு வாரத்தில் சூழலே மாறிவிட்டது. மொத்த சொந்தமும் கண்டு கொள்ளாமல் நழுவி விட்டது. திருமணமான புதிதிலே பெற்றோரையும் இழந்து விட்டதால் தன் மகளுடன் தனி மரமாக நின்றாள்.
3 வயது குழந்தையை மடியில் கிடத்திய படியே விட்டத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் ஜனனி.
அலைப்புமணி ஓசையில் இவ்வுலகம் வந்தாள்...
அருகில் கிடந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்து கொண்டு பாயில் மகளை படுக்க வைத்து விட்டு கதவை திறந்தாள். மிடுக்கான உடையுடன், புன்னகை பூத்த இதழுடன், கண்களில் தெரிந்த அன்புடன் ஹலோ... ஜனனி என்றவனை கண்கள் விரிய ஆச்சரியமாய் பார்த்தாள்.
நீ.. நீ... நீங்க... ஆதர்வ்
எஸ் ஜனனி... ஆதர்வ் தான் உள்ளே வரலாமா என்றவனுக்கு வழிவிட்டு நாற்காலியை காட்டினாள்.
உன்னைப் பார்த்து விட்டு செல்லலாம் என்று வந்தேன் என்றதும் அவள் முகம் ஒரு நொடி வாடி போனதை கவனிக்க தவறவில்லை அவன்.
வரவழைத்து கொண்ட புன்னகையுடன், காலேஜ் முடித்த பிறகு இன்றைக்கு தான் பார்க்கிறோம்... எப்படியிருக்கீங்க என்றவளிடம்
ஆதர்வ் என்று ஒருமையில் அழைக்கலாம் என்றான்.
பக்கத்து தெருவில் தான் என் வீடு. பல தடவை உன்னை பார்த்திருக்கிறேன். இன்று தான் சந்தித்து கொள்ள முடிந்திருக்கிறது என்றவாறே கையில் இருந்த பழப்பையை நீட்டினான்.
வாங்கி கொள்ள தயங்கியவளிடம் உன் பொண்ணுக்காக என்றதும் வாங்கி கொண்டாள்.
எனக்கு வெளியே அவசர வேலை இருக்கிறது. நீ உன்னோட சர்டிபிகேட் செராக்ஸ் தந்தால் வேலைக்கு முயற்சி செய்யலாம் என்றான்.
சொந்தங்கள் கைவிட்டாகி விட்டது. என்றோ பழகியவன் உதவி செய்கிறேன் என்கிறான். என்ன செய்வது என்று யோசனையில் இருந்தவளின் கால்கள்... ஜனனி என்ற அழுத்தமான குரலில் கேட்டதை எடுத்து வந்தது. வாங்கி கொண்டவன் சென்று விட்டான்.
ஒரு வாரம் கடந்த நிலையில் இயல்பாக தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள். வேலையை தேட வேண்டும். வாழ்ந்து காட்ட வேண்டும். ஆனால் எப்படி? என்ற கேள்வி குறியோடு நின்றிருந்தவளின் முன் விடையாக வந்து நின்றான் ஆதர்வ்.
ஜனனி school ல வேலை கிடைத்து விட்டது. உன் பொண்ணையும் அங்கயே சேர்த்துகலாம். பக்கத்துல பாதுகாப்பா வீடு பார்த்திருக்கிறேன். ஓய்வு நேரத்தில் எக்ஸ்போர்ட் துணி தைத்து கொடுக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணிருக்கேன். அதனால கூட கொஞ்சம் வருமானம் வரும். எதற்கும் பயப்படாதே... உன்னால எல்லாத்தையும் சமாளிக்க முடியும்... தைரியமாக இரு... உனக்கு என்ன உதவினாலும் தயங்காம கேளு. நான் இருக்கிறேன் என்று மூச்சு விடாமல் கூறி விட்டு பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் சென்றவனை இமைக்க மறந்து ஆனந்த கண்ணீருடன் பார்த்துக் கொண்டே நின்றாள் ஜனனி. தன் கேள்விக்கு விடை தெரிந்த மகிழ்ச்சியுடன்...
சொந்தங்கள் அனைத்தும்
வெறுத்து விட்டாலும்...
உறவுகள் எல்லாம்
உதறி விட்டாலும்...
நம்பிக்கையாய் தோள் கொடுத்து
நானிருக்கிறேன் உனக்கு
என்று சொல்வதல்லவா நட்பு!!
நட்பு என்றும் மாறாதது....