காபி, டீ எதுவும் குடிக்க மாட்டான். காலையும் மாலையும் குளிச்சிட்டு வந்தவுடனே சாமி கும்பிடுவான், ரெண்டு நிமிஷம், நெற்றியிலே விபூதி பூசுவான், தலை நிமிராம போட்டதை சாப்பிடுவான்!
எப்போதும் கையிலே ஒரு பெரிய புத்தகம் இருக்கும், கொஞ்சம் படிப்பான், மோட்டுவளையை பார்ப்பான், தனக்குத்தானே சிரிச்சுப்பான், கொஞ்சம் மூளை கழண்டவன்மாதிரி நடந்துப்பான்!
ஒருநாள், அவன் குளித்துக்கொண்டிருந்தபோது, அவன் அறைக்குள் எட்டிப்பார்த்தேன்.
ரெண்டு தகரப் பெட்டிகள்! ஒன்றிலே, ரெண்டு வேஷ்டி, ரெண்டு ஜிப்பா! மற்றொரு பெட்டியிலே, புத்தகங்கள்!
ஏதோ ஒரு ஆர்வத்திலே, என்ன புத்தகங்கள்னு தலைப்புகளை மட்டும் படிச்சேன்...........
"ஓஷோவின் அறிவுரைகள்"
"பரமஹம்ஸ யோகானந்தரின் சுயசரிதை"
" ஜே.கே. பேசுகிறார்."
யாரோ வருவதுபோல் ஓசை கேட்கவே, அவசரமாக வெளியே வந்துவிட்டேன்.
அவன் சோம்பேறியோ பைத்தியமோ அல்ல; ரொம்பவே வித்தியாசமானவன் என்பது புரிந்தது!
அது புரிந்தபிறகு, அவனைப் பற்றி முழுவதும் தெரிந்துகொள்ள மனம் பரபரத்தது.
அவனோ, அவனுடன் பேச, சந்தர்ப்பமே தராமல், ஒதுங்கி ஒதுங்கி வாழ்கிறான்.
என்னை கட்டுப்படுத்திக் கொள்ளமுடியாமல், ஒருநாள் அவன் சாப்பிட்டு முடித்து உட்கார்ந்திருந்தபோது, நெருங்கி நின்றேன்.
" உன் பேரென்ன?"
" எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் எனக்கு சம்மதம்!"
" ஏன் அப்படி சொல்றே, உன் அப்பா, அம்மா உனக்கு பேர் வைக்கலியா?"
" வைச்சிருப்பாங்க நிச்சயமா! ஆனா, அதை என்னிடம் சொல்லலே!"
" ஏன்? என்னாச்சு?"
" ஆண்டவனுக்குத்தான் தெரியும், எனக்கு விவரம் தெரிஞ்சதிலிருந்து, நான் அனாதை இல்லத்திலேதான் வளர்ந்தேன்......"
" ஐயோ பாவமே!"
" இதிலே பரிதாப்ப்பட என்ன இருக்கு? அதுவும் ஒரு இல்லந்தானே, இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு மூணும் தந்தாங்க. பாசமா என்னை வளர்த்தாங்க, படிக்கவைச்சாங்க, ஆளாக்கினாங்க, வேலையிலே சேர்த்துவிட்டாங்க, எனக்கும் ஒரு குறையுமில்லே!"
" ஊரிலே, உலகத்திலே, எல்லா குழந்தைகளையும் அப்பா அம்மா கொஞ்சறபோது, உனக்கு ஏக்கமாயில்லையா?"
" எல்லாருடைய வாழ்க்கையிலும் வருத்தத்துக்கு, சோகத்துக்கு, கோபத்துக்கு, ஏமாற்றத்துக்கு, பொறாமைக்கு இந்த ஒப்பிட்டு பார்ப்பதுதான் காரணம்! அது வேண்டாமே..........."
அவனுடைய விவேகம் என்னை மௌனத்தில் தள்ளியது.
" அம்மா!"
அவன் என்னை அப்படி அழைத்ததும் எனக்கு மெய்சிலிர்த்தது!
குழந்தைப் பேறு இல்லாத என் வயிற்றில் ஏதோ உருண்டு புரண்டது, மார்பில் பால் சுரந்தது, கண்ணில் நீர் வடிந்தது!
அவன் முதன்முறையாக என்னைப் பார்த்து சிரித்தான்.
" அம்மான்னு கூப்பிட்டதுக்கு கண்ணீர் வடிக்கிறீங்களே, இப்ப சொல்லுங்க, நான் தாயில்லாதவனா?"
என் இரண்டு கன்னங்களிலும் யாரோ மாற்றி மாற்றி அறைவது போலிருந்தது!
என்னை அறியாமலேயே, என் இரு கரங்களும் விரிந்து அவனை அணைக்கத் துடித்தன.
அவன் சிறிதும் உணர்ச்சிவசப் படாமலே, சிரித்தான்.
" நமது முதல் எதிரி, இந்த உணர்ச்சிதான்! இதுக்கு அடிப்படை, நான், எனது, எனக்கு என்கிற பற்று! அந்தப் பற்று தனியா வருவதில்லை, கூடவே அதை யாராவது பறித்துக்கொண்டு விடுவார்களோ எனும் பயம், சந்தேகம், கோபம், வருத்தத்தையும் அழைத்துவரும்."
" வாழ்க்கையிலே ஒரு பிடிப்பு வேண்டாமா?"
" நீங்க வாழ்க்கையை பிடிச்சுக்கிட்டிருக்கீங்களா, அது உங்களை பிடிச்சிக்கிட்டிருக்கா?"
அவன் கேட்டபிறகு, எனக்கு குழப்பமாயிருந்தது. ஆமாம், இதில் எது சரி, யார் யாரை பிடித்துக்கொண்டிருக்கிறோம்?
" தூணைக் கட்டிக்கொண்டு ஒருத்தன், தன்னை தூண் விடமாட்டேங்குதுன்னு புலம்பினான்னு கதை கேட்டிருப்பீங்களே? அந்தமாதிரி மனிதனும் தேவையில்லாத ஆசைகளை வளர்த்துக்கொண்டு அதுக்காக சிரிக்கிறதும், அழறதும், கோபமடையறதும், பொறாமைப்படறதும்தான் வாழ்க்கைன்னு நினைக்கிறாங்க, அதுவா வாழ்க்கை?"
" அதில்லேன்னா எதுப்பா?"
அவன் வாய்விட்டு சிரித்தான்.
" ஏன் சிரிக்கிறே? நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?"
" சற்றுமுன்பு நீங்க என்னை 'அப்பா'ன்னு கூப்பிட்டீங்களே, நான் உங்க அப்பாவா? சொற்களுக்கு அர்த்தமே இல்லை, உறவுகளுக்கு பொருளேயில்லை, எதற்கும் இங்கு பொருளேயில்லை.............."