" அப்படீன்னா, எதுக்கு வாழறோம்?"
" வேற வழியில்லாம வாழறோம், குழந்தையை கேட்காம, பெற்றோர் பெறுகிறார்கள், பிறந்தபிறகு, குழந்தை விவரம் தெரியறவரையிலும், பெற்றோர் சொல்படி வாழ்கிறது. அந்தப் பருவத்திலே, குழந்தையின் மனதிலே, அறிவிலே எல்லா தவறான எண்ணங்களும் புகுந்து அவனை சுயமா சிந்திக்கவிடாம மூளையை மழுங்க அடிக்கவைக்கிறது. பிறகு, பிறந்தோம், இருந்தோம், இறந்தோம்னு வாழறான்."
அவன் சொன்னது அனைத்தும் சத்தியவாக்கு என்பது புரிந்தது.
ஆனாலும், நான் ஒரு அரைகுறைதானே, இயல்பாக உள்ள குசும்பு எங்கே போகும்? மனதை அரித்துக்கொண்டிருந்த சந்தேகத்தை வாய்விட்டு கேட்டுவிட்டேன்.
" இவ்வளவு தெரிந்துவைத்திருக்கிற நீ, ஏனிந்த கீழ்த்தரமான உளவுபார்க்கிற வேலைக்கு வந்திருக்கே?"
" பார்த்தீங்களா, மறுபடியும் நீங்க இந்த சொற்களுக்கும் செயல்களுக்கும் மதிப்பு கொடுத்து வழிதவறிப் போறீங்க! இயந்திரமா எதையோ செய்துகொண்டு மூச்சுவிடறதை வாழ்க்கைன்னு நம்பிக்கொண்டு இருந்துகொண்டிருக்குறோம், அவ்வளவுதான்!"