(Reading time: 10 - 19 minutes)

 " ஒருத்தனைக்கூட விடக்கூடாது, அத்தனை பேரையும் நடுத்தெருவிலே, பெண்கள் கூட்டத்தின் நடுவிலே, நிர்வாணமாக நிற்கவைத்து, செருப்பால் அடித்து, சாணத்தைக் கொட்டி, இல்லை இல்லை, மனித மலத்தை முகத்தில் பூசி, நரகவேதனைக்கு ஆளாக்கவேண்டும்......."

 இன்ஸ்பெக்டருக்கும் போலீஸ்காரன்களுக்கும் அவளுடைய ஆவேசத்தைக் கண்டு உதறல் எடுத்தது!

 'நல்லவேளை! அவளிடமிருந்த கொடுவாளை பறித்து பாதுகாப்பாக பூட்டிவைத்தாகிவிட்டது, அவள் கையில் விட்டுவைத்திருந்தால், நம்ம தலைகள் அத்தனையும் தரையில் உருண்டிருக்கும்!......'

 என்று குலை நடுங்கினர்.

 இன்ஸ்பெக்டருக்கு ஒரு சந்தேகம். தன்னுடன் பணியாற்றும் அத்தனை பேரும் பண்ணையாரிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு குற்றவாளிகளை பாதுகாக்கிறார்களோ!

 " டூ நாட் டூ! இந்தம்மா சொன்னதெல்லாம் சரிதானான்னு செக் பண்ணிட்டுவரலாம்..........."

 " சார்! நான் உங்களை பயமுறுத்துகிற எண்ணத்திலே சொல்லலே, பண்ணையார் பயங்கரமான கிரிமினல்! அவரை யாராவது சீண்டினா, அவங்களை சீக்கிரத்திலேயே மேலே அனுப்பிடுவாரு! இதுதான் வாலாயமா இந்த ஊரிலே நடக்குது! சார்! நாம எல்லாரும் பிள்ளைகுட்டிக்காரங்க! நமக்கு ஏதாவது ஆயிடுத்துன்னாஒரு பயல் நம்மை பிள்ளைகுட்டியை காப்பாத்த மாட்டாங்க, அதுகள் நடுத்தெருவிலே பிச்சையெடுக்கும்!........"

 " அதெல்லாம் சரிய்யா! நமக்கு எப்.ஐ.ஆர்.லே எழுதியிருக்கிறதை சரிபார்த்து மேலிடத்துக்கு ரிபோர்ட் அனுப்பணும்யா........"

 " தெரியும் சார்! நமக்கு மேலே இருக்கிற அதிகாரிங்களும் பண்ணையாருக்கு வேண்டியவங்க! அப்பப்ப, அவங்க இந்த ஊர் வந்து, பண்ணையார் தயவிலே 'ஜாலி'யா இருந்துட்டுப் போறவங்கதான்!.... "

 " இப்ப என்னதான்யா பண்றது?"

 " முதல்லே, பண்ணையாரை பார்ப்போம், அவர் நம்ம மேலிடத்தோட பேசி எல்லாத்தியும் சரிபண்ணி, நமக்கு தப்பிக்க வழி காட்டுவார், வாங்க!"

 டூ நாட் டூ பேசியதிலிருந்து இன்ஸ்பெக்டரின் சந்தேகம் ஊர்ஜிதமாயிற்று!

 கீழூரை, பண்ணையாரும் அவருடைய கையாட்களும் தங்கள் ஆளுமைக்கு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

 மது, மாது, என எல்லா அட்டூழியங்களையும் செய்துவருகிறார்கள். பண்ணையார் சொல்படி எல்லோரும் தேர்தலில் வாக்களிக்கிறார்கள் என்பதால், அரசியல் கட்சிகளும், தங்களை நன்றாக 'கவனித்துக்கொள்கிறார்' என்பதால் காவல்துறை மேலிடமும் கீழூரில் நடக்கும் அக்கிரமங்களை கண்டுகொள்வதில்லை.

 பண்ணையாரின் மகன், தந்தையையும் மிஞ்சிவிட்டான். பன்னிரண்டாம் வகுப்பு மாணவன்! சகாக்களுடன் அந்தப் பள்ளியில் படிக்கிற மாணவிகள் அனைவரையும் சீண்டிவந்தவனை, மற்றவர்கள் பயத்தினால் கண்டிக்கத் தயங்கியதின் விளைவு, அவன் ஒருநாள் அந்தப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிற மாணவியை, மிரட்டி கடத்திக்கொண்டுபோய், சகாக்களுடன், பலவந்தமாக கெடுத்துவிட்டான்!

 அந்தப் பெண் நடந்ததை, தன் பெற்றோரிடம் தெரிவித்ததும், அவர்கள் பண்ணையாரிடம் முறையிட்டிருக்கிறார்கள்.

 அவரோ, அவர்களை மிரட்டியதோடு, " இத பாருங்க! ஏதோ சின்னப் பசங்க, வயசுக்கோளாறிலே, தப்புத்தண்டா பண்றது சகஜம்! இதையெல்லாம் பெரிசு பண்ணி உங்க பெண்ணோட எதிர்காலத்தை பாழாக்கிடாதீங்க! நான் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லமாட்டேன், நீங்களும் அதுபோல யாரிடமும் தெரிவிக்காமல், உங்க மகளுக்கு ஆறுதல் சொல்லுங்க! அவளுக்கு பதினெட்டு வயசு ஆனதும் நானே நல்ல பையனாகப் பார்த்து கல்யாணம் செய்துவைக்கிறேன், போங்க வீட்டுக்கு!"என்று அனுப்பிவிட்டார்.

 இவற்றை பண்ணையாரின் மனைவி பார்த்து, கேட்டுக்கொண்டிருந்தாள்!

 இது நடந்த இரண்டாம் நாள், பண்ணையாரின் மகன் மீண்டும் சகாக்களுடன் அந்த ஏழாம் வகுப்பு மாணவியை கடத்திக்கொண்டுபோய் அவளை" ஏன் உன் அப்பா, அம்மாவிடம் சொன்னாய்?" என்று கேட்டு தண்டனையாக எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்து அவளைக் கொன்றுவிட்டான்.

 தாங்கள் செய்ததை மறைத்து, 'அந்தப்பெண் தெரியாமல் லைவ் வொயரைத் தொட்டு ஷாக் அடித்து செத்துப்போனதாக' செய்தி பரப்பினர்.

 இந்தச் செய்தி பண்ணையாரின் வீட்டுக்கும் எட்டியது! பண்ணையாரின் மனைவி, அந்தப் பெண்ணின் வீட்டுக்கு துக்கம் விசாரிக்கப் போனபோது, அவர்கள் நடந்த உண்மையை அவளிடம் தெரிவித்து, தாங்கள் தற்கொலை செய்துகொள்வதை தவிர, வேறு வழியில்லை என முறையிட்டனர்.

 " நீங்கள் ஏன் உயிரை விடவேண்டும்? தப்பு செய்தவர்களும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களும்தான் கொல்லப்படவேண்டும்......"

 " பண்ணையாரம்மா! நாங்க எதிர்த்து நிற்கிற சக்தியில்லாதவங்க! எங்களைப்போல, எத்தனையோ குடும்பங்கள், இந்த ஊரிலே வாயை மூடிக்கிட்டு உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அக்கிரமங்களை செய்கிறவங்களை தண்டிக்க, அந்த மாரியாத்தா தான், அவதாரம் எடுக்கணும்.........."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.