சிறுகதை - வாழ்க்கையென்ன, கத்திரிக்காயா? - ரவை

நான் மும்முரமாக செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தேன்.
" அப்பா! நான் கராத்தே க்ளாஸ் போய்ட்டு வரேன்........."
குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். விமலா, தன் ஹேண்ட்பேகிலிருந்து ஒரு காகித்த்தை வெளியே எடுத்து, அதை கசக்கி கீழே போட்டுவிட்டு, பர்ஸில் பணம் இருக்கிறதா என செக் பண்ணிக்கொண்டாள்!
ஐந்தாவது நிமிஷம், ஸ்கூட்டர் கிளம்பிச் செல்லும் சத்தம் காதில் விழுந்தது.
நான், யாரோ எனக்கு உத்தரவு போட்டதுபோல, விமலா கீழே எறிந்த அந்த கசங்கிய காகித்த்தை எடுத்து, கசங்கல்களை நேர்ப்படுத்தி பார்த்தேன்.
அதில் இருந்தது, ஒரே ஒரு வார்த்தைதான்!
"ஐ லவ் யூ, விமலா!"
கையொப்பம் எதுவும் இல்லை!
சரி, விமலா வரட்டும்! விசாரிப்போம்! என நினைத்துக்கொண்டு செய்தித்தாளில் மூழ்கினேன்.
அந்தச் செய்தியை படித்ததும், என் ரத்தம் கொதித்தது!
உத்தரகாண்ட் மாநிலத்தில், ஒரு கல்யாண விருந்தில், மேல்சாதிக்கார்ர்களோடு, ஒரு கீழ்சாதிக்காரன் சாப்பிட்ட குற்றத்துக்காக, அவனை மேல்சாதிக்கார்ர்கள், அடித்தே கொன்றுவிட்டார்கள்!
வேறேதாவது நல்ல செய்தி இருக்கிறதா என தேடினேன்.
வட இந்தியாவில், வேறொரு ஊரில், பெற்ற தந்தை தன் இரு சகோதர்ர்களுடன் சேர்ந்துகொண்டு, தன் மகளையும் அவள் கணவனையும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி சாகடித்திருக்கிறார்கள்.
காரணம், அவர்கள் கலப்புத் திருமணம் செய்துகொண்டதே!
பொங்கிய கோபத்தில், செய்தித்தாளை கசக்கி வீசி எறிந்தேன்.
கராத்தே வகுப்பு முடிந்து வீட்டுக்குள் நுழைந்த விமலாவின் மீது அந்த கசங்கிய செய்தித்தாள் விழுந்தது!
" என்னப்பா! ஏன் இவ்வளவு கோபம்? நியூஸ்பேப்பர்மீதா, இல்லை, நியூஸ்மீதா?"
" பின்னே என்னம்மா? சாதிவெறி தலைவிரிச்சாடுது! உயிர்களை தீயிலிட்டு கொல்கிற அளவுக்கும், அடித்தே சாகடிக்கிற அளவுக்குமா, சாதி வெறி? இது தினமும் நடக்கிற கேலிக்கூத்தா போச்சு! போலீஸும் சட்டமும் இந்தமாதிரி வெறியர்களை உடனுக்குடன் கடுமையா தண்டித்தால், இப்படி தொடர்ந்து நடக்குமா? இந்த நாடு குட்டிச்சுவரா போய்க்கொண்டிருக்கு, ச்சே!"
" அப்பா! இந்தக் கோபம், பல வீடுகளிலே, பேப்பரை கசக்கி வீசுவதோடு நிற்கிறதாலேதான், தொடர்ந்து நடக்குது!"
" வேறென்ன பண்ணச் சொல்றே?"
" பேசுங்கப்பா! முச்சந்தியிலே, போக்குவரத்தை நிறுத்திவைத்து அக்கிரமங்களை புட்டுப் புட்டு வைங்கப்பா! உங்களைப்போல கருத்துள்ளவங்களை ஒண்ணு சேர்த்து பத்திரிகைகளுக்கு, அரசாங்கத்துக்கு, நீதிமன்றங்களுக்கு, மாணவ சமுதாயத்துக்கு, தொழிலாளர் சங்கங்களுக்கு எழுதி ஆதரவு திரட்டுங்கப்பா!............"
" என் ஒருவனாலே இத்தனை வேலை செய்யமுடியுமாம்மா?"
" நம்பிக்கையில்லாம, வெறுமே சத்தம் போட்டால், ரத்தக் கொதிப்புத்தான் வரும்!"
" ஓ.கே. ஓ.கே., விமலா! இப்படி உட்கார்! காலையிலே நீ கசக்கிப்போட்ட பேப்பரை பிரித்துப் பார்த்தேன். யாரவன்? கன்னாபின்னான்னு எழுதியிருக்கான்?"
" ஒரே வார்த்தையிலே அழகா எழுதியிருக்கான்!"
" என்னம்மா சொல்றே?"
" ஆமாம்ப்பா! அவன் என்னை லவ் பண்றதா தெளிவா எழுதியிருக்கான்......."
" அப்ப ஏன் அதை கசக்கி எறிஞ்சிட்டே?"
" சின்னக் குழந்தை அர்த்தம் தெரியாம, சில நேரங்களில் அபத்தமா. பேசறாமாதிரி, பெரியவங்களும் பேசினா, எழுதினா, குப்பையிலேதானே போடணும்?"
" புரியலே! தெளிவா எழுதியிருக்கான்னு சொன்னே, இப்ப அபத்தமா அர்த்தம் புரியாம எழுதறான்னு சொல்றே........?"
" அப்பா! நிஜமா லவ் பண்றவனுக்கு, ஒருநாளும் அதை வெளிப்படையா சொல்லும்படியான அவசியமே வராது! பெண் உருவத்தைக் கண்டு மோகிக்கிறவன், 'லவ்' பண்றதா உளறினா, ஏற்றுக்க முடியுமா?
அவன் அந்தக் கடித்த்திலே, தன் பெயரையோ, கையோப்பமோ போடாத கோழை! அவன் என்னுடன் பழகினதேயில்லை. அவனும் நானும் ஒரே ஆபீஸிலே வேலை செய்கிறோம், அவ்வளவுதான்!
அது போதுமா, காதலிக்க? 'விரும்புவதற்கும்' ' காதலிக்கிறதுக்கும்' வித்தியாசமில்லையா?
இவன் மட்டுமில்லே, இவனைப்போல, இளவட்டங்கள் எல்லாமே, கூட வேலை செய்கிற பெண்களுக்கு இந்தமாதிரி லவ் லெட்டர் எழுதறது சகஜம்! அதை பெரிதுபடுத்தி நம்ம நேரத்தை வேஸ்ட் பண்ணக்கூடாது.............."