சிறுகதை - பிரியமுள்ள அப்பா! - ரவை
இன்று 'அப்பாக்கள் தினம்' உலகெங்கும் கொண்டாடப்படுகிறது, அதனால் எனக்கும் உன் நினைவு வந்தது!
முதலில் உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன். எதற்காக?
நீ எங்களை விட்டு பிரிந்து கண்களை மூடி, கழிந்த அறுபத்தோறு ஆண்டுகளில், சத்தியமாக சொல்கிறேன், நான் உன்னை அறுபத்தோறு முறைகூட நினைத்திருக்கமாட்டேன்!
ஏன் தெரியுமா? நீ போனபிறகு, குழந்தைகளாகிய எங்களையெல்லாம் வளர்த்து ஆளாக்க, அம்மா பட்ட கஷ்டத்தினால், அவள் செய்த தியாகத்தினால், குழந்தைகளாகிய நாங்கள் ஒன்பது பேரும், அம்மாவை நினைக்காத நேரமில்லை, கண்ணீர் விடாத பொழுதில்லை!
நீ வாழ்ந்த வரையிலும் எங்களில் நால்வரே விவரம் தெரிந்த வயதுக்கு வந்திருந்தோம். மற்ற ஐவரும் விவரம் அறியாப் பருவத்தில் வாழ்ந்தவர்கள்.
மேலும், நீ கஷ்டப்பட்டு உழைத்து பெற்ற வருமானத்தின் மூலம், எங்களுக்கு வசதியான வாழ்வை தந்திருந்தாய். பற்றாக்குறை என்பதே தெரியாமல் இருந்தோம்.
அந்த நால்வரில் நான் கடைக்குட்டி! எனது அண்ணனும் இரண்டு அக்காவும் உன் பாசமழையில் நனைந்தவர்கள். அக்கா இருவருக்கும் பொருத்தமானவர்களை தேர்ந்தெடுத்து தடபுடலாக திருமணம் செய்துவைத்தாய்!
அண்ணனையும் படிக்கவைத்து ஆளாக்கி அவனுக்கு வேலை கிடைத்ததுமே, உனக்கு என்ன தோன்றியதோ, அவசர அவசரமாக திருமணமும் செய்து வைத்தாய்!
என்னையும் படிக்கவைத்து நீ வேலை செய்த பெரிய கம்பெனியிலேயே, உத்தியோகமும் வாங்கித் தந்து அழகு பார்த்தாய்.
உன் முடிவு நெருங்கிவிட்டது தெரிந்தோ என்னவோ, எனக்கும் திருமணம் செய்துவைக்க பிடிவாதமாய் இருந்தாய். எனக்கு அப்போது இருபத்திமூன்று வயதுதான், பெண்களுக்கே அந்த வயதில் கல்யாணமாகாமல் இருக்கும்போது எனக்கென்ன அவசரம் என்று, உன் அகால மரணம் நெருங்கிவிட்டதை அறியாத, நான் மறுத்துவிட்டேன்.
அந்த விஷயத்தில், நீயும் நானும் ஏறக்குறைய ஓராண்டு, ஒருவரோடு ஒருவர் பேசாமல்கூட இருந்தோம்!
அந்த விவரங்களை பிறகு பார்ப்போம்!
அதற்கு முன், எனக்கும் உனக்கும் இடையே இருந்த ஒரு வித்தியாசமான உறவை நினைத்துப் பார்க்கிறேன்.
அப்பா! இப்போது நினைத்துப் பார்த்தால், நீ என்மீது அபரிமிதமான அன்பு வைத்திருந்தாய் என்று புரிகிறது. ஆனால், அப்போது நான் சிறுவன்தானே! உன் சிம்ம கர்ஜனையும் சுளீர்னு