அம்மாவோ கதறுகிறாள், நண்டும் சிண்டுமாக நான்கு குழந்தைகள்!
எனக்கு தெரிந்த ஹோமியோபதி டாக்டரிடம் உன்னை காட்டினேன். அவர்தான் உன்னை பிழைக்க வைத்தார்.
அவருடமிருந்து தினமும் நான் உனக்கு மருந்து வாங்கி தபாலில் அனுப்புவேன். நீ பெரிய டாக்டர் சொன்ன ஒரு வார கெடுவைத் தாண்டி மாதக் கணக்கில் மருந்து சாப்பிட்டுக்கொண்டு பிழைத்திருந்தாய்.
ஒவ்வொரு வாரமும் சென்னையிலிருந்து நான் உன்னைப் பார்க்க ஞாயிறன்று வருவேன். நீ உடல்நலம் பெற்றுவந்தாய். எல்லாம் அந்த ஹோமியோபதி வைத்தியத்தினால்தான் என்று நீ நம்பி அதற்கு காரணமான என்மீது பாசத்தை கொட்டினாய்.
அந்த ஞாயிறன்று மதியம் நான் சற்று ஓய்வு எடுத்தபோது நீயும் அம்மாவும் என் திருமணத்தை விரைவில் முடிக்க திட்டமிட்டதையும் அதை என்னிடம் உடனடியாக தெரிவிக்காமல் ரகசியமாக ஏற்பாடு செய்துவிட்டு ஏதோ ஒரு காரணத்தை சொல்லி என்னை அவசரமாக சென்னையிலிருந்து வரவழைத்து முடித்துவிடுவதென பேசிக்கொண்டதையும், உங்களுக்குத் தெரியாமல் என் அடுத்த தம்பி என்னிடம் தெரிவித்துவிட்டான்.
இந்த முறை உன்னை ஏமாற்றக்கூடாதென நானும் என் மனதை மாற்றிக்கொண்டு உங்கள் அழைப்புக்காக காத்திருந்தேன்!
வந்தது அழைப்பு! அம்மாதான் தொலைபேசியில் பேசினாள். குரல் தழுதழுக்க, 'அப்பாவுக்கு திடீர்னு நெஞ்சுவலி வந்து துடிக்கிறார்டா! இங்க இருக்கிற டாக்டர் கைவிரிக்கிறார். எனக்கு என்ன செய்வதென்னு தெரியலேடா, உடனே வாடா!" என்றாள்.
பரவாயில்லையே! அம்மாகூட பிரமாதமாக நடிக்கிறாளே, என்று மனதிலே சந்தோஷத்துடன் ரயில் ஏறினேன்.
இம்முறை உங்களை சந்தோஷப்படுத்துவதற்காக, நீங்கள் செய்துவைத்திருக்கிற ஏற்பாட்டின்படியே, திருமணம் செய்து கொள்வதென்ற இனிப்பான தீர்மானத்துடன் ரயிலில் இருந்து இறங்கி வீடு வந்து சேர்ந்தேன்.
வீட்டுவாசலிலேயே, என் அண்ணன் என்னைப் பார்த்ததும், ஓவென கதறிக்கொண்டே " நம்மையெல்லாம் விட்டு அப்பா போயிட்டார்டா" என கட்டிக்கொண்டான்.
அப்பா! அன்று நீ தந்த வலி, நான் சாகும்வரை என்னை விடாதுப்பா!
உன்னை நான் மறப்பதாவது, துறப்பதாவது!
எனக்கு எல்லா நாளும் 'ஃபாதர்ஸ் டே' தான்!