உள்ளே அழைத்து வந்தாள்.
" அவனை நான்தான் பூஜைக்கு நாகப்பழம் பறித்துவரச் சொன்னேன். போன இடத்தில் சற்று தாமதமாகிவிட்டது, அதற்காக அவனை இப்படியா அடித்துக் கொல்வது? ச்சே! வரவர, இந்த வீடே உங்க கோபத்தால் நரகமாகிவிட்டது.........."
நீயோ, ஊமை கனா கண்டது போல, வாயை மூடிக்கொண்டு பூஜையை முடித்தாய்.
அன்று வீட்டில் எல்லோரும் வயிறார விருந்து சாப்பிட்டோம் ஒருவரைத் தவிர!
அந்த ஒருவர், வேறு யார்? நீதான்! அவசரப்பட்டு என்னை தண்டித்ததற்கு வருந்தி உன்னை நீயே வருத்திக்கொண்டாய்!
இப்படி நம்மிடையே உறவு சற்று வித்தியாசமாகவே இருந்தது.
பத்தாம் வகுப்பு படிக்கும்போது நான் சரியாகப் படிக்கவில்லை என்பதற்காக நீ என்னை கடுமையாக கண்டித்தாய். எனக்கு ரோசமாயிருந்தது.
இரவோடு இரவாக எவரிடமும் சொல்லிக்கொள்ளாமல், நான் சென்னைக்கு செல்ல ரயில் நிலயத்துக்கு வந்துவிட்டேன், திருட்டு ரயில் பயணம்தான்!
அந்த சமயம் பார்த்து, அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டர் என்னை பார்த்துவிட்டார்.
அவருக்கு நம் குடும்பத்துடன் நெருக்கமான பழக்கம்! அவர் என்னை கையும் களவுமாகப் பிடித்து தகுந்த பாதுகாப்புடன் என்னை வீட்டுக்கு திருப்பியனுப்பி உனக்கும் தகவல் தந்தார்.
வீட்டுவாசலில் எனக்காக நீங்கள் எல்லோரும் காத்திருந்தீர்கள், கண்ணீருடன்!
இதெல்லாம் சாதாரணம்! வயது வந்து நான் கல்லூரியில் படிக்கும்போது, நீ வேலையிலிருந்து ஓய்வு பெற்றாய்.
உன் வேண்டுகோளை ஏற்று, உனக்காக உன் ஆபீஸில் வேலை தந்தனர். அந்த கம்பெனியில்தான் நான் நாற்பது ஆண்டுகள் உழைத்து, பெரிய பதவிகள் பெற்று ஓய்வு பெற்றேன். நீ போட்ட பிச்சை!
நடுவில் உனக்கும் எனக்கும் பிணக்கு ஏற்பட்டு இருவரும் ஒரு வருடம் பேசாமலிருந்த சம்பவத்தை நான் என் உயிருள்ளவரை மறக்கமுடியாமல் செய்தது.
நீ எனக்கு திருமணம் செய்துவைக்க, ஊரில் ஒரு சம்பந்தம் பேசி முடிவு செய்துவிட்டு, 'பெண் பார்க்கும்' படலத்துக்காக என்னை அழைத்துப் போக சென்னை வந்தாய். நான் பிடிவாதமாக மறுத்துவிட்டேன். உனக்கு அன்று ஏற்பட்ட கோபம் எப்போது தணிந்தது தெரியுமா?
ஊரிலிருந்து அம்மா உன்னை கேன்ஸர் நோயாளியாக சிகிச்சைக்காக அழைத்துவந்தபோதுதான்! பெரிய ஆஸ்பத்திரியில் பெரிய டாக்டர் உன்னை சோதித்துவிட்டு, கை விரித்துவிட்டார். ' அதிக பட்சம் இன்னும் ஒரு வாரம்தான்' என கெடு வைத்துவிட்டார்.