அப்பா! நீ வேறு என்னைப் பார்த்து 'இவங்களைப் பார்த்தாவது புத்தி வருமா, உனக்கு? இல்லே, கழுதை மேய்க்கத்தான் போகப்போகிறாயா?' என்று எல்லோர் எதிரிலும் என்னை திட்டுவாய்!
அதற்கு பயந்து, நான் திண்ணையில் ஓரமாக இருட்டில் அமர்ந்து முழங்கால்களை கட்டிக்கொண்டு தலையை அதனிடையே புதைத்துக்கொண்டு அழுவேன்.
சிறிது நேரத்தில், என் தலையில் ஆதரவாக ஒரு தடவலை உணர்வேன். நிமிர்ந்து பார்ப்பேன். யார் தெரியுமா? அம்மா இல்லை, அக்கா இல்லை, அண்ணன் இல்லை, வேறு யார்? நீதான்!
என் கன்னத்தில் வழியும் கண்ணீரைத் துடைத்து ஆதரவாக என்னை அணைத்து உள்ளே அழைத்துச் செல்வாய்!
உன்னை என்னால் புரிந்துகொள்ளவே முடியாது.
பரீட்சை நேரத்தில், குழந்தைகளை விடியற்காலையிலேயே எழுப்பி படிக்கச் சொல்வாய்!
எனக்கு தூக்கக் கலக்கமாக இருக்கும். அதைச் சொல்லமுடியுமா? பொய் சொல்வேன், நடிப்பேன், தாங்கமுடியாத வயிற்றுவலியால் துடிப்பதுபோல் நடிப்பேன், நீ அதை நம்புவாய். உடனே அம்மாவுக்கு உன் கட்டளை தூள் பறக்கும். " குழந்தைக்கு உடனே வெற்றிலையில் ஓமத்தை வைத்து கொண்டுவா, அதை அவன் வாயில் கரகரவென்று கடித்து மெல்லட்டும். அவன் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும்....."
அப்போது ஆரம்பித்த வெற்றிலை போடும் பழக்கம், இன்றுவரை எழுபத்தோரு ஆண்டுகளாக இருந்து வருகிறது.
ஏதோ சொல்லத் துவங்கி எங்கெங்கோ போய்விட்டேனே!
ஆங்! சரஸ்வதி பூஜை! தீபாராதனைக்கு முன் எல்லா குழந்தைகளும் உள்ளார்களா என நோட்டம் விட்டாய், ஒரு குழந்தை மிஸ்ஸிங்! ஆம், நான்தான்!
பூஜையை நிறுத்திவிட்டு எல்லோரும் மூலைக்கு மூலை என்னைத் தேடுகிறீர்கள், நீயோ என்னை கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்ற ஆத்திரத்தில் வீட்டுவாசலில் துர்வாசராக நிற்கிறாய்.
தெருமுனையிலேயே உன்னை வாசலில் பார்த்ததுமே, குலை நடுங்க, மூச்சிரைக்க ஓடிவந்தேன்.
வீட்டுவாசலை அடைந்ததும், சட்டை போடாமலிருந்த என் முதுகில் சுளீர்னு நாலு வீடுகளுக்கு கேட்கும்படியாய் ஒரு அடி!
வலி தாங்காமல், மடியிலிருந்த நாகப்பழங்களை கீழே கொட்டிவிட்டேன்.
அதற்குள், அம்மா அங்கு வந்துவிட்டாள்.
ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்டு அப்பாவை முறைத்துப் பார்த்துவிட்டு என்னை