இருந்தேன், கோவில் கோவிலா படியேறி சாமியை வேண்டினேன், ஒண்ணும் பலனளிக்கலை, அப்பத்தான் எனக்கொரு பயம் வந்தது. என்னை யாருமே மனைவியாக ஏற்றுக்கொள்ளாவிட்டால், என் கதி அதோகதிதானா என்று பயந்தபோது, இவன்தான் தெய்வம்போல் வந்து, என் நண்பனாக இருக்க கைநீட்டினான்.
என்னால் நம்பவே முடியவில்லை! இவன் எல்லா இளைஞர்களைப்போல பார்க்க ஜோராக இருக்கிறான், ஏன் என்னை விரும்புகிறான் என்று எனக்கு பலத்த சந்தேகம். எனக்குள் வைத்து பூட்டிக்கொள்ள முடியாமல் அவனிடமே கேட்டுவிட்டேன். இவன் பதில் சொன்னதை அப்படியே உங்களிடம் சொல்கிறேன்:
'பரணி! நட்புக்கும் உடலுக்கும் சம்பந்தமே கிடையாது! உனக்கு உன் உடலின் கூடுதலான எடையினால், ஒரு தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டிருப்பதை கவனித்தேன். அது உன்னுடன் படிக்கிற, பழகுகிற சிநேகிதிகளால், அவர்களின் பரிகசிப்பால், இன்னும் அதிகமாவதை உணர்ந்தேன். ஆண்டவன் படைப்பில், எவரும் மற்றவர்களைவிட தாழ்ந்தவர்கள் அல்ல, என்பதில் அழுத்தமான நம்பிக்கை உள்ளவன் நான். அதனால், உன் தாழ்வுமனப்பான்மையை போக்கவும் நீ மற்றவர்களுக்கு எல்லாவிதங்களிலும் ஈடானவள் என்ற நம்பிக்கையை ஊட்டவும் உன் நட்பை நாடினேன். இதை உலகத்தின் கூரையின்மீது நின்று உரக்க கூறவும் தயாராயிருக்கிறேன்......'
நம்பினால் நம்புங்கள்! இவனுடைய நட்பு கிடைத்தபிறகு, என் உடல் பருமன் சந்தோஷத்தினால் கூடியிருப்பது நன்றாகத் தெரிந்தும், நான் கவலைப்படவேயில்லை. இதுதான் உண்மையான நட்பின் பயன்."
அரங்கமே பரணியை பாராட்டியது.
இன்னும் மீதி மூன்று பேரில், ரேணு முதலில் வரமாட்டாளா என மற்றவர்கள் ஏங்கியபோது, ரேணுவோ தன் கருப்பனுடன் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தாள்.
மற்ற இருவரும் நல்லவேளையாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் சுருக்கமாக முடித்தனர்.
ரேணுவின் முறை! ஒரே கைதட்டல்! கம் ஆன், ரேணு! என்று கோஷம் வேறு!
ரேணு என்ற ஒலி செவியை துளைத்தபிறகே, அவள் திரும்பிப் பார்த்தாள்.
" ரேணு! எல்லாரும் பேசியாச்சு, நீதான் கடைசி! கம்ஆன்!"
ரேணுகா தன் கருப்பனுடன் மேடையேறினாள். சுற்றுமுற்றும் பார்த்தாள். அருகிலிருந்த கருப்பன் 'பேசு' என்று கண்ஜாடை காட்டினான்.
" என் நண்பனின் பெயர் முத்தழகன்!........"