கொல்லென்று அரங்கில் சிரிப்பு!
" உங்கள் சிரிப்பை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், என்னை உங்களால் புரிந்துக்கொள்வது கஷ்டம், இயலாதென்றே சொல்லலாம்! ஏன் தெரியுமா? ஒரு பெண்ணும் ஆணும் நட்பாயிருக்க உங்கள் எண்ணப்படி, நம்பிக்கைப்படி, அனுபவப்படி, தோற்றத்தில் இருவரும் அழகாயிருக்கவேண்டும், இருவரும் படிப்பிலும், சமூக அந்தஸ்திலும், சாதியிலும், பணவசதியிலும் ஒருவருக்கொருவர் ஈடாக இருக்கவேண்டும் என்பதுதான்! அதற்கு நீங்கள் காரணமல்ல! உங்கள் பெற்றோரும், சுற்றமும், சமூகமும், இலக்கியங்களும் அப்படித்தான் உங்களை உருவாக்கியிருக்கிறது. நீங்களே, விவரமறியா குழந்தைப் பருவத்திலிருந்தபோது, எந்த நிபந்தனையும் இல்லாமல் நண்பனாக ஒருவனை ஏற்றவர்கள்தான். வளரும்போதுதான், அவன் கருப்பா, சிவப்பா, படித்தவனா, படிக்காதவனா, செல்வந்தனா, ஏழையா, நம்ம சாதியா, வேற சாதியா, என்றெல்லாம் தேடத்தொடங்கினீர்கள். ஏனெனில், அப்படிச் செய்யாவிடில், இந்த சமூகம் உங்களை ஏற்காதோ என்கிற பயம் உங்களுக்கு!
நல்லவேளையாக, நானும் இவனும் சிறு குழந்தைகளாக இருந்தபோதே, கருப்புக்கும் சிவப்புக்கும் பாகுபாடு தெரியாதபோதே, பணக்காரனா, ஏழையா என பிரித்துப்பார்க்க தெரியாதபோதே, இவன் சாதி என்ன, என் சாதி என்ன என அறியாதபோதே, நண்பர்களானோம். எங்கள் பெற்றோரும் சமூகத்தை எதிர்த்து நிற்கிற துணிவுள்ளவர்களாயிருப்பது எங்கள் அதிர்ஷ்டம்.
என் தந்தை கிராமத்தில் பெரிய நிலச்சுவான்தார்! எங்கள் பண்ணையில் வேலை செய்யும் ஒருவரின் மகன், இவன். பெரும்பொழுது, இவன் எங்கள் வீட்டில்தான் இருப்பான்.
பள்ளிக்கூடம் சேர்ந்து படித்தோம். இவனுக்கு படிப்பில் ஆர்வமில்லை, எனக்கோ அதிகம்! கிராமத்தைவிட்டு, கல்லூரிப் படிப்புக்காக, நான் கிளம்பியபோது, இவன் கூட வர ஆசைப்பட்டான், என் பெற்றோருக்கும் இவன் என்னுடன் வந்தால், எனக்குத் துணையாகவும் உதவியாகவும் இருக்குமென்று அனுப்பிவைத்தார்கள்.
என்னை இவன் தன் கண்ணுக்குள் வைத்து காப்பாற்றுகிறான். நானும் அவனுடன் பழகுகிற ஒவ்வொரு வினாடியையும் பெரிதும் விரும்புகிறேன். உள்ளமும் உள்ளமும் தொடர்பு கொள்கிறபோது, அதை நட்பு என்று நாங்களிருவரும் நம்புகிறோம். நீங்களோ நட்புக்கு வேறு இலக்கணம் கற்பித்துக்கொண்டு ஊரார் சொல்படி நடந்து, உங்கள் சுயமரியாதையையே இழந்துவிட்டீர்கள். இல்லை, இல்லை, உங்கள் சிந்தனையையே பறிகொடுத்துவிட்டீர்கள். பரிதாபம்! நீங்கள் நீங்களாக இல்லை, பிற சக்திகளின் கைப்பாவையாக, ரோபோக்களாக