சிறுகதை - யாதுமாகி நின்றாய்! - ராஜேஸ்வரி ராமாமிர்தம்
பிரியமுள்ள அம்மா, அன்புள்ள அம்மா, பாசமான அம்மா, உயிரினும் இனிய அம்மா என்று என்னென்னவோ சொல்லிப் பார்த்தேன், திருப்தி ஏற்படவில்லை!
"அம்மா!" என்ற அந்த ஒரு சொல், அத்தனை அடைமொழிகளையும் குணங்களையும் உள்ளடக்கியுள்ளதால், உன்னை 'அம்மா' என்றே அழைக்கிறேன்.
அம்மா! நீ எங்களையெல்லாம் விட்டுப் பிரிந்து காற்றில் கலந்துவிட்டதிலிருந்து, திரும்பத் திரும்ப 'அம்மா' என்று என் மனம் அலறிக்கொண்டே இருக்கிறது! கண்ணீர் வழிந்துகொண்டே யிருக்கிறது! இதயம் சுக்குநூறாக வெடித்துவிடும்போல் உள்ளது!
அம்மா! எங்களை விட்டுப் பிரிய உனக்கு எப்படி மனம் வந்தது? இல்லை, இல்லை, இந்தக் கேள்வியே உன்னை காயப்படுத்துவது, ஏனெனில் ஒருக்காலும் எங்களை விட்டுப் பிரிய உனக்கு மனம் வந்திருக்காது, உன் எதிர்ப்பையும் மீறி உன்னை எங்களிடமிருந்து பறித்துக்கொண்டு போய்விட்டது, காற்று!
காற்றோடு கலந்துவிட்ட உன்னை சுவாசித்துத்தானே, நாங்கள் உயிர் வாழ்கிறோம்! நாங்கள் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றில் உள்ள உன்னை இதயத்தில் தேக்கி வைத்துக்கொண்டு, மிச்சத்தையே வெளிவிடுகிறோம்!
அம்மா! காற்றில்தானே நீ கலந்திருப்பாய் என்று நம்பி தலையை தூக்கி சுற்றிலும் பார்த்தேன், அருகிலிருந்த ஒரு மதில் சுவற்றில் காகம் கூட்டமாக அமர்ந்துள்ளன, ஒரே ஒரு காகம் மட்டும் சற்று தள்ளி தனியாக இருந்தது, அது நீயாக இருக்குமோ என உற்றுப் பார்த்தேன்........
அடுத்த நொடியே என் மனம் என் தலையில் 'ணங்'னு குட்டியது, தான் வாழ்ந்த எண்பத்தைந்து வருடங்களில் என்றைக்காவது, எப்போதாவது அவள் தனியாக இருந்திருக்கிறாளா? எனக் கேட்டது.
உண்மைதாம்மா! உன்னைச் சுற்றிலும் உன் ஏழு குழந்தைகளும் பதினைந்து பேரக் குழந்தைகளும் எப்போதும் இருப்பார்களே!
உன் மூன்று மகன்களும் நான்கு மகள்களும் உன்னை விட்டுப் பிரிய மனமில்லாமல்தானே, வெளியூர், வெளிநாடு போகும் வாய்ப்புகளை தவிர்த்து உள்ளூரிலேயே உன்னுடனேயே வாழ்ந்தோம்.
அம்மா! நீயும் எங்களுக்காக விட்டுக்கொடுத்து, பிறந்து வளர்ந்த கிராமத்தைவிட்டு எங்களுடன் வாழ நகரத்துக்கு குடிபெயர்ந்தாய்!
குடி பெயர்ந்தபிறகுகூட, நீ உன் கிராமத்து அனுபவங்களையும் சுகமான நினைவுகளையும் மனக்கொல்லையில் பதியம் போட்டு பத்திரமாக வைத்திருந்து நகரத்தில் வாழ்ந்தபோதும்