பழமொழியை பொய்யாக்குவதுபோல, நீ உன் ஏழு குழந்தைகளையும் நிறைவான வாழ்க்கை வாழ்கிற வகையில் வளர்த்து ஆளாக்கினாய்.
" நான் பெற்ற செல்வம் நலமான செல்வம், தேன்மொழி பேசும் சிங்காரச் செல்வம்" என்பதுபோல, எங்களை கொஞ்சி, சீராட்டி, பாலூட்டி வளர்த்தாய்!
உனக்கு எங்கள் எல்லோர்மீதும் எல்லையிலா கொள்ளைப் பாசம் என்பதை, நீ உன் இறுதிநாட்களில் உடம்பு முடியாமல், கண் திறக்க முடியாமல், படுத்திருக்கும் போதும், எங்கள் குரல் கேட்டதும், மெல்லக் கண் திறந்து, வாயிதழில் மெல்லிய சிரிப்புடன் பார்ப்பாயே, அந்தப் பார்வை கதைகதையாய் சொல்லும்!
" மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்று எங்கள் அப்பா உன்னை புகழ்வார்!
பேரக்குழந்தைகள் உன்னை வேடிக்கையாக பரிகாசம் செய்து மகிழ்கிற அந்தக் காட்சியைக் காண, ஆயிரங்கண் போதாது!
அவர்கள் நீ சுட்டு வழங்கிய வடையை சுவைத்துச் சாப்பிட்டுவிட்டு பாடுவார்கள்:
நிலவில் வடை சுடும் பாட்டி
உனக்குயாரும் இல்லை போட்டி
விலைவாசியை காரணம் காட்டி
விலையை ஏற்றாத உன்னை
பாடுவார் பாராட்டி!
அதற்கு ஈடுகொடுத்து, நீயும் அவர்களை சீண்டி சிரிக்கவைப்பது, எங்களுக்கெல்லாம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு!
அம்மா! காலமெலாம், உன் உடம்பில் தெம்பு இருந்தவரை, வந்தவர்க்கு வயிறு நிறைய விருந்தளித்தாயே, அவர்களில் ஒருவர்கூட வாழ்த்தவில்லையோ, "நீ நோய்நொடியின்றி நூறாண்டு வாழ!"
அம்மா! இவற்றை என் ஒருத்தியின் குரலாகப் பார்க்காதே! நீ பெற்ற ஏழு செல்வங்களின் ஒட்டுமொத்த குரலாகும் இது!
அம்மா! இன்னும் நிறைய உள்ளது, சொல்லி மாளாது உன் அன்பையும் பாசத்தையும், சிறப்பையும், வளர்ப்பையும், திறமையையும்!
" தாயிற் சிறந்த கோயில் இல்லை" என ஔவையார் சொன்னது பொய்யாகுமா?
"அழுது அழுது புரண்டாலும், மாண்டார் வருவாரோ, மாநிலத்தீர்?"
என நினைத்து உன்னை வணங்கி மகிழ்கிறோம்!