அசை போடுவாய்!
யார் என்ன வேண்டுமானாலும் என்னை தூற்றட்டும், அம்மாக்களிலேயே நீதான் 'தி பெஸ்ட்'!
தாத்தா, பாட்டியும் உனக்கு மிகப் பொருத்தமாக 'ஜெயலட்சுமி' என்று பெயர் சூட்டியிருந்தார்கள்.
ஆம், நீ எத்தனையோ போர்களில் வெற்றி கண்ட வீரலட்சுமி, ஜெயலட்சுமி!
கத்தி, துப்பாக்கி எடுத்துப் போரிடுவதைவிட கடினமானது, சமூகத்தில் உள்ள நச்சுப் பாம்புகளை அடித்துக் கொன்று நம்மை காப்பாற்றிக் கொள்வது!
அப்பா அகாலமரணம் அடைந்து உன்னை ஏழு குழந்தைகளுடன் தனியே விட்டுச்சென்ற பிறகு, நீ சந்தித்த இடர்களும், எதிர்ப்பும் கொஞ்சமா, நஞ்சமா? நண்டும் சிண்டுமாக குழந்தைகளை வைத்துக்கொண்டு, எப்படிம்மா அந்த கொடிய நாக்குகளையும், விஷம் கலந்த பார்வைகளையும், சூழ்ச்சிகளையும் வென்றெடுத்தாய்?
அம்மா! உனக்கு அறுபது வயது ஆனபிறகுகூட, உன்னைப் பார்ப்பவர்கள் " மகாலட்சுமி போல, எத்தனை அழகாக இருக்கிறாள், பார்!" என வியந்திருக்கிறார்கள்!
அட்சயபாத்திரம் போல, உன் சமையலறையில் எப்போதும் உணவு இருந்துகொண்டே யிருக்கும், வந்தவர்கள் எவரும் சாப்பிடாமல் திரும்பியதே இல்லை, அதுவும் ஏனோதானோ என ருசியில்லாமல் படைக்கப்பட்டதல்ல, அறுசுவை உணவு, அம்மா! விருந்தினர்கள் அனைவரும் உன்னை 'அன்னலட்சுமி'ன்னு புகழாமல் போனதில்லை!
நீ படித்தது, பத்தாவதுதான் என்றாலும், உன்னுடைய உலகஞானத்தை, நடைமுறை சமூக அறிவை, வியந்து பாராட்டுவார்கள், அக்கம்பக்கத்தில் வாழ்பவர்கள்!
நீ பெற்ற ஏழு குழந்தைகள் ஏழுபேர் மட்டுமல்ல, பேரக் குழந்தைகளும் காலைவேளைகளில் உன்னைச்சுற்றி அமர்ந்து, உள்ளங்கைகளை நீட்டிக்கொண்டிருப்பார்கள். எதற்கு? பழைய சோற்றில், கையில் ஒட்டிக்கொள்கிற கட்டித்தயிர் கலந்து நொறுங்கப் பிசைந்து, வற்றல் குழம்பு, வடுமாங்காயுடன் நீ அளிக்கிற உணவுக்காகத்தான்!
நான்கு மூலை கல்லில் நீ வார்த்துப் போடுகிற தோசையை இரண்டு சாப்பிட்டதுமே, எங்கள் வயிறு நிரம்பிவிடும். போதும் என்போம். நீயோ "அரைவயிறு சாப்பிட்டுப் படுத்தால், நடு ராத்திரியில் பசிக்கும், தூக்கம் கெட்டுவிடும்" என வற்புறுத்தி மூன்றாவது தோசையையும் உண்ணவைப்பாய்.
ஊறுகாய், வற்றல், வடாம், அப்பளம் தயாரிப்படுவதில் நம்பர் ஒன், நீதான்!
அப்பப்பா! நினைத்தாலே, நாக்கில் ஊறுகிறது ஜலம்!
" விதைத்தவை எல்லாம் விளைவதில்லை, விளைவதெல்லாம் விலைபோவதில்லை" என்ற