சிறுகதை - விஜயா ராகவன் - ரம்யா
பக்கத்து வீட்டில் ஒரு பரபரப்பு.இரண்டு மாதமாக பூட்டிக்கிடந்த வீடு.எங்கள் குடியிருப்பிலேயே சற்று சுமாரான வீடு தான் அது.அடுக்குமாடிகள் ஆக்கிரமிக்காமல் இரண்டு அடுக்கு வீடுகளாக சுமார் ஐம்பது வீடுகள் கொண்ட குடியிருப்பு.அடிப்படை வசதிகளுடன் என்னைப் போன்ற அறுபதுகளில் இருப்பவர்களுக்கு ஏற்ற இடத்தில் அமைந்திருந்ததால் எங்கள் குடியிருப்பு ஒரு வரம் தான்.
பல மனிதர்கள் சந்தித்த வீடு அது.அந்த வீட் டில் நிரந்தரமாக தங்கியவர் யாருமமில்லை.இன்று அந்த வீட்டில் புதிதாய் குடிவர இருக்கிறார்கள் என்பதை மிக சத்தமாகவே சொன்னது அந்த வாகனம்.பேரிரைச்சலுடன் அது வந்து நிற்க,பரபரப்பாக பொருட்கள் இறக்கியாயிற்று.யார் வந்திருப்பார்கள் என்று ஆவல் என்னை தினறது.ஆனால் வாசல் பக்கம் என்னால் போக முடியாது.எங்கள் வீட்டு காளியம்மன் …..மகாலட்சுமி …வாசலில் நின்று செய்தி சேகரித்துக்கொண்டிருக்கிறாள்.எப்படியும் முழு விவரம் எனக்கு கிடைத்துவிடுமென்றாலும் ஆவல் யாரை விடட்டது.
உள்ளே வந்த தெய்வத்தை சற்று நிறுத்தி ஒரு கேள்வி தான் கேட்டேன்.
“விஜயா யாரது புதுசா….ஃபேமலியா…சிங்கிள்ளா?இவ்வளவு சாமானம் வந்திருக்கு?”
தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு
“யார் வந்தா உங்களுக்கு என்ன இப்போ…காலையிலிருந்து ஒரு வேலை சொல்றேன் அதை காதுல வாங்கினபாடில்லை…..”என்று அவள் தினசரி அர்ச்சனையை துவங்க(என் வயது ஒத்தவர்களுக்கு நான் சொல்வது புரியும என நினைக்கிறேன்)….மெதுவாக எழுந்து வாசல் பக்கம் நடைபோட்டேன்.பின்னாலிருந்து ஒரு குரல்
“எங்க அந்தபக்கம் போறீங்க.அங்க போயி நின்னு வேடிக்கை பார்க்க வேண்டாம் அந்த தேங்காய மிக்ஸியில சிதைச்சி தாங்க…அப்ப தான் வாய்க்கு ருசியா கிடைக்கும்”அவள் தந்து விட்டு போன தேங்காய் பாவமாய் என்னை பார்த்தது.என் மேல் இருந்த கோபத்தை தேங்காய் மேல் காட்டினால் போலும்.சுக்காய் உடைந்திருந்தது.
‘ராகவா இதுவே பதினஞ்சு வருஷம் முன்னாடியா இருந்திருந்தா….எப்படி இருந்த நீ…..அட போடா தேங்காய வச்சுகிட்டு என்ன ஃப்ளாஷ்பேக் ..’மனதுக்குள் தான் இந்த அசரரீரி.பின்வந்த இரண்டொரு நாட்களிலும் குடி வந்தவர் யாரென கண்டுபிடிக்க முடியவில்லை. ஆவால் அதிகரித்து அடங்கியும் போனது.வெளியே போகும் போதும் வரும் போதும் பார்த்துக்கொண்டிருந்தேன்.சற்று வயதான தம்பதிகள்.அந்த வீட்டு அம்மா ஊமை போலும் எந்த சத்தமும் கேட்டதில்லை.அவ்வப்போது ஜோடியாக வெளியே சென்று விடுவார்கள்.இளம் தம்பதிகள் கூட பொறாமை கொள்ளும் அன்யோன்யம்.எல்லாம் அவர்வர் விதிவரை.