" உம்! ஒரு முக்கியமான விஷயம்! நீங்க பணத்துக்காக வெளியிலே போவதற்கு முன்பு, 'சர்ஜரி செய்வதில் ஆட்சேபணை இல்லை'ன்னு எழுதியிருக்கிற ஃபார்மிலே சபாபதியின் மனைவியின் கையொப்பத்தை வாங்கிக் கொடுத்துவிட்டு போங்க!
இரண்டாவது, சபாபதி இன்னும் ஒரு வாரத்திற்கு மேலே ஆஸ்பத்திரியிலே சிகிச்சைக்காக இருந்தாகணும், அதுக்கு ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் ஆகிவிடும்.
ஆறு மணி நேரத்திலே, ஐம்பதாயிரத்தையும் ஒரு வாரத்திற்குள்ளே ஒரு லட்ச ரூபாயும் புரட்ட முயற்சி செய்யுங்க! ஆல் தி பெஸ்டு! மிஸ்டர்....."
" என் பெயர் ராமன்"
" மிஸ்டர் ராமன்! பக்கத்து வீட்டு தம்பதிகளுக்காக இவ்வளவு உதவி செய்கிற உங்களை கர்த்தர் கைவிடமாட்டார்."
டாக்டர் சொன்னபடியே, தாரிணியின் ஒப்புதல் கையொப்பத்தை வாங்கிக் கொடுத்துவிட்டு, மனைவி பார்வதியை, தாரிணிக்கு துணையாக ஆஸ்பத்திரியில் விட்டுவிட்டு ராமன் கிளம்பும்போது, அவர் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தாரிணி குமுறி அழுதாள். வார்த்தைகள் வெளிவரவில்லை. ஆனால் குளமாகிவிட்ட கண்கள் ஆயிரம் பேசின!
பார்வதியும் ராமனும்கூட தங்கள் கண்ணீரை துடைத்துக்கொண்டு, தாரிணிக்கு ஆறுதல் கூறிவிட்டு, ராமன் வெளியே வந்தார்.
ஆறு மணி நேரத்தில் ஐம்பதாயிரம் ரூபாய்!
எப்படி? யாரிடம் கேட்பது? யாரை நம்பி தருவார்கள்? அன்னாடங் காய்ச்சிகளிடமிருந்து கொடுத்த கடன், எப்படி திரும்பி வரும்? என யோசிக்க மாட்டார்களா?
இறைவா! மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள ஆசைப்படும் எனக்கு உன்னைத் தவிர, வேறு யார் துணை?
" ராமன்! என்னை பார்க்காத மாதிரி, போறீங்களே, என்மீது என்ன கோபம்?"
தோளில் கை பட்டவுடன் தான், ராமன் சுயநிலைக்கு வந்து எதிரே நின்றிருப்பவரை பார்த்தார்.
புரோக்கர் பொன்னம்பலம்!
" பொன்னு! சாரிடா! ஏதோ யோசனையிலே போய்க் கொண்டிருந்தேன், உன்னை கவனிக்கலை...."
" ராமன்! அப்படியென்ன ஆழ்ந்த யோசனை? எந்த கோட்டையை பிடிக்க?"
" கோட்டையாவது அரண்மணையாவது, இந்த அற்பனுக்கு! கொஞ்சம் பண நெருக்கடி! உடனடியா, ஐம்பதாயிரம் ரூபாய், ஒரு வாரத்திலே ஒரு லட்ச ரூபாய் தேவைப்படுது......."