சிறுகதை - எல்லாம் உன்னால்தான்! - ரவை
" அம்மா! இப்பல்லாம், அப்பாவுக்கு ஞாபகமறதி அதிகமாயிருக்கும்மா! சாமி கும்பிடறபோது, தவறாம, நெற்றியிலே திருநீரு பூசுவாரில்லே, இப்பல்லாம் அதைக்கூட மறந்துடறாரும்மா! செல் எடுத்துக்காமலே, ஆபீஸ் கிளம்பிடறாரு; இன்னிக்கி காலையிலே, கார் சாவியை எடுத்துக்க மறந்து, வெளியே வந்துட்டாரும்மா.........."
" நித்தி! எல்லாம் உன்னாலே தான்டா! உன் எதிர்காலத்தைப் பற்றி அவர் ரொம்ப கவலைப்படறாருடா, நீ ஏன்டா இப்படி இருக்கே?"
" எப்படிம்மா இருக்கேன், நல்லாத்தானே இருக்கேன்?"
" போடா, நான் சொல்றது புரியாதமாதிரி நடிக்காதேடா! கொஞ்சம் அடக்கி வாசிடா! நீ போகிற வேகம், புயல் வேகமா இருக்குடா! குடும்பத்துக்கு அந்த வேகம் சரிவராதுடா!"
" அம்மா! நான் உங்க பிள்ளைம்மா! என் வயசிலே, உங்களுக்கிருந்த அதே வேகம், உணர்ச்சி, பொதுநல எண்ணம் எல்லாம் எனக்கும் இருக்கும்மா! அநீதி, அக்கிரமத்தை, கண்டும் காணாமல் இருக்க முடியலேம்மா!"
" எனக்கு ஏற்பட்ட எதிர்மறை விளைவு உனக்கும் ஏற்படக்கூடாதுடா, அதுதான்டா எங்களுக்கு பயம்! ராத்திரியிலே நல்லா தூங்கி பல நாட்கள் ஆயிடுத்துடா........"
" அழாதேம்மா! இனிமேல், உங்களுக்கு கவலை கொடுக்காமல், கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேம்மா! அழாதேம்மா!"
முதலில் மகனிடம் கேட்போம்:
"நித்தி! உங்கப்பா, அம்மா கவலைப்படும்படி, நீ என்ன செய்கிறே? காலேஜ் போகாமல், ஊர் சுற்றுகிறாயா? பணத்தை வீண் செலவு செய்கிறாயா? கெட்ட பழக்கங்களில் சிக்கிக் கொண்டுவிட்டாயா? பக்கத்து வீட்டு பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்தியா.......?"
" ஹலோ! நிறுத்துங்க! விட்டால், ரொம்ப ஓவரா போறீங்களே? நல்லவேளை, எந்தப் பெண்ணையாவது காரிலே கடத்திக் கொண்டுபோனியான்னு கேட்காமல் விட்டீங்களே!"
"சேச்சே! எனக்குத் தெரியும், நீ நல்லபையன், அந்த அளவுக்குப் போக, இன்னும் உனக்கு வயசாகலை......."
" என்ன, கிண்டலா? நான் நிஜமாகவே நல்ல பிள்ளைங்க, எங்க அம்மாவையே கேளுங்களேன்! அம்மா! நீ சொல்லும்மா!"
" இத பாருங்க! என் பிள்ளை பத்தரை மாத்து தங்கம்! அவனைப் பார்த்து ஊரிலே இருக்கிறவங்க எல்லாம், அவனைப் பெற்ற எங்களைப் பார்த்து, பொறாமைப்படறாங்க, தினமும் கெட்ட கண் படாமலிருக்க, திருஷ்டி சுற்றி போடறேன், தெரியுமா?"
"நீங்க இப்படி பெற்ற பிள்ளைக்கே பயந்து முன்னுக்குப்பின் முரணா பேசவேண்டாம்!