ஆபத்து வந்துவிடக்கூடாதேன்னு பயப்படறாங்க, அவங்க பெற்ற ஒரே மகன் ஆயிற்றே, நான்! அவங்க பயமும் நியாயமானது.
என் போராட்டங்களும் நியாயமானது......."
" அது புரியுது, அப்படி என்ன போராட்டம் நடத்தறீங்க?"
" முதல்லே, எங்கம்மா இருபது வருஷம் முன்பே, கொடி தூக்கி எதிர்த்து நின்று வெற்றி பெற்ற விவரங்களை கேளுங்க, அம்மா! நீயே சொல்லும்மா!"
" போடா, பழங்கதையை பேசி என்ன ஆகப்போகுது?"
" அதுக்கில்லேம்மா! நான் யாருக்கு பிறந்த பிள்ளைனு தெரிந்தால்தான், இன்று நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்பது புரியும், சொல்லும்மா!"
" சரி, அவரை உட்காரச் சொல்லு! குடிக்க தண்ணீர் கொண்டுவரேன்!"
" முதல்லே, அந்த தண்ணி அடிக்கிற குடிகார கும்பலை எதிர்த்து போராடினதை ஆரம்பி! நான் உள்ளே போய், குடிக்க தண்ணீர் கொண்டு வருகிறேன்......"
" உட்காருங்கய்யா! நான் கல்யாணத்துக்கு முன்பு, வாழ்ந்தது, செம்பனார்கோவில் என்கிற சின்ன ஊரிலே!
அந்த ஊரிலே வாழ்ந்தவங்களிலே பெரும்பாலனவங்க, விவசாயிங்க! பகல் முழுவதும் வயல்லே பாடுபட்டு உழைக்கிறவங்க! அவங்களுக்கு கிடைக்கிற குறைந்தபட்ச கூலியையும், அந்த ஊரில் இருந்த சாராயக்கடைகளும் டாஸ்மாக்கும் விவசாயிகளிடமிருந்து பிடுங்கிக்கொண்டுவிடும்! படிப்பில்லாதவங்க, உடம்பு நோக உழைக்கிறவங்க, விவசாயிங்களுடமிருந்து மதுவைக் காட்டி பணத்தை பிடுங்கிக்கொண்டு, அவங்களை வெறுங்கையும், தள்ளாடிய நடையுமா வீட்டுக்கு அனுப்பும்.
வீடுன்னு பேச்சுக்கு சொல்றேன், வாழ்ந்தது குடிசையிலேதான்!
அங்கே, விவசாயியின் மனைவியும் மக்களும் பசியோடு காத்திருக்கும்.
தினமும் குடிசையிலே அடிதடி, பசியிலே குழந்தைகளின் கதறல்! இதற்கு ஒரு முடிவு கொண்டுவரணும்னு, நான் அந்த ஊரிலே இருந்த பெண்களையும், பள்ளிக்கூட ஆசிரியர்களையும், கோவில் டிரஸ்டி, அர்ச்சகர்களையும், ஒன்றுகூட்டி கொடி பிடித்து, ஊர்வலம் நடத்தி, கூட்டம் போட்டு பிரசாரம் செய்து, டாஸ்மாக் கடைமுன்பு எல்லாரும் தர்ணா செய்தோம். அரசாங்கத்துக்கு வருமானம் போயிடுமேன்னு, ஆளுங்கட்சிக்காரங்களும் காவல்துறையும் எங்களை தடியடி செய்து விரட்டினர்.
குறிப்பாக எனக்கு கொலை மிரட்டல் வந்தது. என் பெற்றோர் பயந்துபோய் என்னை தடுத்தனர்.