' அப்பா! அம்மா! நீங்க பயப்படறது என் ஒருத்தியின் உயிருக்காக! நான் பயப்படுவதோ, பசியிலே வாடுகிற ஏழைக்குடும்பங்களுக்காக, விவசாயிகளுக்காக, குழந்தைகளுக்காக! நான் செய்வது அறப்போராட்டம்! இதற்கு இறைவன் துணையிருப்பான், பயப்படாதீங்க'ன்னு சமாதானப்படுத்திவிட்டு, ஊடகங்களிலும் தொலைக்காட்சியிலும் செய்தி போடுகிற அளவுக்கு போராட்டத்தை வலுப்படுத்தி, இறுதியா அந்த டாஸ்மாக் கடையையும் சட்டவிரோதமான சாராயக் கடைகளையும் மூட வைத்தோம்........."
கைகளை தட்டி பாராட்டிக்கொண்டே, நித்தி வந்து அமர்ந்தான்.
" அம்மா! அந்த வயதுவராத பெண்கள் திருமணத்தை நிறுத்தினதையும் சொல்லும்மா!"
" அதுவா? எங்க ஊர் பெரியவங்க அந்தக் காலத்து மனுஷங்க! தலைமுறை தலைமுறையா வருகிற மூட நம்பிக்கைகளுக்கு பலியானவங்க! பெண் குழந்தை பிறந்தவுடனேயே, அதை இன்ன உறவுக்காரனுக்குத்தான் மணமுடிக்கணும்னு முடிவு பண்ணி, அந்தக் குழந்தை பள்ளிக்கூடம் படிக்கிற வயசிலேயே, கல்யாணம் செய்துவைச்சுடுவாங்க, கொடுமை என்னன்னா, அவளைவிட பதினைந்து வயசு மூத்தவனுக்கு கட்டிவைப்பாங்க, பெண்களை படிக்கவைக்க மாட்டாங்க, இதை நிறுத்தணும்னு பஞ்சாயத்தை கூட்டி சொல்லிப் பார்த்தேன், பலனில்லே, ஊரிலே இருந்த படித்தவங்களையும் நல்லவங்களையும் கூடச் சேர்த்துக்கொண்டு, தர்ணா பண்ணினேன், காவல்துறையை கட்டாயப்படுத்தி கல்யாணத்தை நிறுத்தவைத்தேன், அந்த காலகட்டத்திலும் எனக்கு கொலைமிரட்டல் வந்தது, என் குடும்பம் பயந்துபோய் என்னை எப்படியாவது ஊரைவிட்டு வெளியே அனுப்பணும்னு முடிவெடுத்து, எனக்கு கல்யாணத்தை செய்துவைத்து இந்த ஊருக்கு அனுப்பிட்டாங்க....."
என்று முடித்துவிட்டு தலைகுனிந்து சிரித்தாள்.
அவளை மனதாரப் பாராட்டிவிட்டு, நித்தியை பேச சொன்னேன்.
" எங்கம்மா, கல்யாணமான பிறகும்கூட, சில சாத்வீகமான போராட்டம் நடத்தி ஜெயிச்சிருக்காங்க! பல காலமாக, பெண்கள் வேதம் படிக்கவோ, சொல்லவோ கூடாதுன்னு புராதன வைதீக ஆணாதிக்கம் தடை போட்டு வைத்திருந்ததை எங்கம்மா உடைத்தெறிந்து, ஒரு நல்ல வேத வித்தகரையே குருவாக வைத்து, இந்த வீட்டிலேயே வகுப்பு நடத்தி இதுவரையிலும் நாற்பது, ஐம்பது பெண்களுக்கு வேதம் சொல்லிக் கொடுத்திருக்காங்க, அப்படி கற்றுக்கொண்டவங்க இப்போது அவங்க அவங்க வீட்டிலே பெண்களுக்கு வேத வகுப்பு நடத்தறாங்க! எங்கம்மா என்றைக்குமே நியாயத்துக்காகவும் தர்மத்துக்காகவும் போராட, தயங்கினதேயில்லை, நான் அவங்க மகனாச்சே, அவங்க துணிவிலே பாதியாவது இருக்காதா?"