அன்னையர் தின சிறப்பு சிறுகதை - உன் மடியில் நான்! - ரவை
அம்மா!
என் மடியில், என் பேத்தியின் மகள், குழந்தையாய், எனைப் பார்த்து சிரிக்கிறாள்.
அந்தச் சிரிப்பில், இந்த முதியவனுக்கு, எனைப் பெற்று வளர்த்த தாய் உந்தன் அன்புமுகம் தெரிகிறது!
உள்ளார்ந்த ஆசை ஒன்று, உடனே, எழுகிறது!
அம்மா! எனக்கு உன் மடி வேண்டும்! அதில் நான் தலை சாய்த்தே, உன் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்!
அம்மா! உனை நினைத்தவுடனே, ஜிவ்வென உடலில் பரவசம் பரவுகிறது.
இதயம் நிறைந்து தளும்புகிறது.
எனை நீ சீராட்டி, பாலூட்டி வளர்த்த கதை நினைவை தூண்டுகிறது.
என் முதல் இரண்டாண்டுகள், எனக்கு ஒன்றும் தெரியாது. மூன்றாம் வயதிலிருந்து, ஓரளவு புரியத் தொடங்கியது.
அந்தப் பருவத்தில், என்னால் நடக்க முடிந்தது.
சமையலறையில் நீ இருக்கும் போது, நான், உன் சேலைத் தலைப்பை பிடித்துக்கொண்டு உன்னுடனேயே இருப்பேன்.
உன் ஒவ்வொரு அசைவுடன், நானும் அசைவேன்!
உனக்கு பரிதாபமாக இருக்கும்! " கண்ணா! சமத்தா அங்கே போய் விளையாடு! அம்மா பத்து நிமிஷத்திலே வேலையை முடிச்சிட்டு, உன்னோட வந்து விளையாடறேன், சரியா?" என்பாய்.
எனக்கோ, உன் சேலையின் வாசனையை நுக்ர்ந்துகொண்டேயிருக்க ஆசை!
இந்த என் ஆசை, நீ அறிந்ததே! அதனால்தான் நீ என்ன செய்வாய்?
எனக்கு தூக்கம் வந்ததும், தரையில் உன் பழைய சேலையொன்றை விரித்து, அதில் என்னை படுக்கவைத்தவுடன், வாயில் விரலைப் போட்டுக்கொண்டு நான் நிம்மதியாக தூங்குவேன்!
ஏன் வாயில் விரலை போட்டுக் கொள்வேன், தெரியுமா? தாய்ப்பால் குடிக்கிற திருப்தி!
நான் விரல் சப்புவது என் உடலுக்கு கெடுதல் என நீ நினைத்து, பலவந்தமாக, நீ என் விரலை வாயிலிருந்து பிடுங்குவாய்.
அடுத்த நொடியே, நான் மீண்டும் என் விரலை வாயில் போட்டுக்கொள்வேன்.
மீண்டும், நீ வெளியில் எடுப்பாய். மறுபடியும் நான்....
இதற்கொரு தீர்வு கண்டுபிடித்தாய், நீ! என்ன தெரியுமா?
என் விரலில் வேப்பெண்ணெய் தடவினாய், எனக்கென்ன தெரியும்?
மறுபடியும் நான் என் விரலை வாயில் வைத்தபோது வாய் கசந்தது, என் முகம் சுருங்கியது.