சிறுகதை - காணிக்கை - ரவை
ஸ்டார் நட்சத்திரம் ரஞ்சனி, படுக்கையில் குப்புறப் படுத்து குமுறிக் குமுறி அழுதுகொண்டிருந்தாள்.
எதேச்சையாக அதை கவனித்த, ரஞ்சனியின் தாய் மணிமேகலை, அங்கிருந்த உதவியாளரிடம் " ஏதாவது ஷூட்டிங்குக்கு ஒத்திகை பார்க்கிறாளா?" என வினவினாள்.
உதவியாளர், சைகையால், மணிமேகலையை வாயை மூடிக்கொள்ளச் சொல்லிவிட்டு அவளை வெளியே அழைத்து வந்தாள்.
" என்னாச்சு? நிஜமாவே அழறாளா?"
"இன்னிக்கி நடந்த பிரஸ் மீட்லே, ஒரு நிருபர் உங்க மகளிடம் தகாதபடி பேசிவிட்டார். அதை தாங்கிக்க முடியாமல் அழறாங்க......."
அதற்குள், ரஞ்சனி புரண்டு படுப்பது தெரியவே, இருவரும் பேச்சை நிறுத்தினர்.
உதவியாளரை வெளியே போகச் சொல்லிவிட்டு, மணிமேகலை தன் மகளிடம் சென்று, அவளை ஆதரவாக முதுகில் தடவிக் கொடுத்து, சமாதானப்படுத்தினாள்.
ரஞ்சனியின் துக்கம் மேலோங்கி, தாயின் மடியில் முகம் புதைத்து அழுதாள்.
சிறிது நேரம் கழித்து, தலையை தூக்கி, தாயிடம் பேசினாள்.
" அம்மா! நாளைய செய்திகளிலே, இல்லை இல்லை, இன்றைய ஊடகங்களிலேயே, என்னைப்பற்றி கேவலமா விமரிசனம் வரும்மா! நான் என்னம்மா செய்வேன்?"
" விவரமா சொல்லும்மா! என்ன நடந்தது?"
" இன்னிக்கு நடந்த பிரஸ்மீட்லே முதல்லே எல்லாம் ரொம்ப நல்லா போச்சு, லேடஸ்ட் ரிலீஸ் படத்திலே என் நடிப்பை பாராட்டி நிருபர்கள் கேள்வி கேட்டனர். நானும் உற்சாகமாக பதில் தந்தேன். திடீர்னு ஒரு நிருபர், அந்தக் கேள்வியை கேட்டதும், எல்லாரும் என்னைப் பார்த்து பரிகாசமா சிரிச்சாங்கம்மா! தாங்கிக்க முடியாம, ஓடி வந்துட்டேன்......"
" சரி, அப்படி என்ன கேட்டான்?"
" அம்மா! அந்த ராஸ்கல் என்னைப் பார்த்து, நேருக்கு நேரா, 'ஆறு மாசத்துக்கு ஒரு முறை உங்ககூட வாழறவரை கழட்டி விட்டுவிடுவீங்களே, இப்ப அந்த முறை வந்திருச்சே, கேசவன் கதியும் அதோகதியா?'ன்னு கேட்டுட்டாம்மா!"
மணிமேகலைக்கு இப்போது புரிந்தது, மகளின் துக்கம்!
கூடவே மற்றொன்றும் புரிந்தது, மகளின் துக்கமும் நியாயமானது, நிருபரின் கேள்வியும் நியாயமானதே!
ரஞ்சனியின் வாழ்வில், ஆறு மாதங்களுக்குமேல் எவனும் அவளுடன் சேர்ந்து வாழவில்லை, இரண்டு ஆண்டுகளாக!