சிறுகதை - அக்காவும் தம்பியும்! - ரவை
" நீ எனக்கு அக்காவுமில்லை; நான் உனக்குத் தம்பியுமில்லை! எந்த சக்தியாலும் இதை உடைக்கமுடியாது!" என இருபத்திரண்டு ஆண்டுகள் வளர்த்த அக்காவைப் பார்த்து, தம்பி நயனி கூறியபோது, அக்கா குமுதவல்லி துடித்தே போனாள். எல்லோரிடமும் "என்னைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டான், பார்த்தீங்களா?" என புலம்பித் தீர்த்தாள். நியாயம்தானே!
'அம்மாவுக்கு அடுத்தபடி அக்கா!' எனச் சொல்வார்கள்.
அப்படி நயனியிடம் சொன்னால், சொன்னவனை அடித்தே கொன்றுவிடுவான்!
நயனிக்கு அம்மா, அப்பா எல்லாமே அக்காதான்!
அக்கா குமுதவல்லியை மட்டுமே, நயனிக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து தெரியும்! ஏனெனில், அதற்குமுன்பே அவனைப் பெற்றவர்கள் ஒரு விபத்தில் சிக்கி இறந்துவிட்டனர்.
அந்த விபத்தைப்பற்றி, அது நடந்தநாட்களில் பேசாதவர்கள் எவருமே இல்லை!
சபேசனும் சுகுணாவும் தங்களுக்குப் பிறந்த முதல் ஆண் குழந்தையை, குலதெய்வம் சுவாமிமலை முருகனுக்கு காண்பித்துவிட்டு, அவன் ஆசியுடன், காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தபோது, உப்பிலியப்பன் கோவில் எதிரே, எதிரே வந்த லாரி ஒன்று மோதி, அந்த இடத்திலேயே இருவரும் மாண்டார்கள்.
இது சகஜமான ஒன்றுதானே, இதை விசேஷமாக ஊரே பேசக் காரணம், சுகுணாவின் மடியிலிருந்த பச்சிளம் சிசு எந்தவித பாதிப்புமின்றி, உப்பிலியப்பன் கோவில் வாசலில் சிரித்தபடி உயிர் பிழைத்து இருந்ததுதான்!
ஊரே அந்த சிசுவை உப்பிலியப்பன்தான் காப்பாற்றினான் என ஒருமித்து குரல் கொடுத்தது!
சபேசன்-சுகுணா தம்பதிக்கு நயனி முதலும் கடைசியுமாக பிறந்த முதல் ஆண்குழந்தை என்றாலும், அவனுக்கு முன்பிறந்த ஐந்தும் பெண்கள்!
முதல் பெண் குமுதவல்லிக்கு மட்டுமே, பெற்றோர் இறந்தபோது, திருமணமாகியிருந்தது. மற்ற நான்கு பெண்களும் படித்துக் கொண்டிருந்தனர்.
வேறுவழியின்றி, தங்கைகளையும் ஒரே தம்பியையும் குமுதவல்லி தன் வீட்டில் வளர்த்தாள்.
குமுதவல்லியின் கணவன் குமரேசன், சி.ஏ. படித்து ஆடிட்டராக, நன்கு சம்பாதித்ததால், தனது இரண்டு குழந்தைகளுடன் வந்து சேர்ந்த ஐவரையும் சரிவர படிக்கவைத்து வளர்க்க முடிந்தது.
குமுதவல்லி தன் குழந்தைகளையும்விட, தம்பி நயனிமீது அதீத பாசம் வைத்து வளர்த்தாள்.
"ஐயோ! இந்த அப்பாவிக் குழந்தை என்ன பாவம் செய்தது? தாய்ப்பால் ருசியை அறியுமுன்பே, தன் அப்பா, அம்மாவை விவரம் அறியுமுன்பே பறிகொடுத்துவிட்டதே"என்ற பச்சாதாபம் அவனை பார்க்கும்போதெல்லாம் அவள் இதயத்தில் இரத்தம் சிந்தும்!
அந்த வீட்டிலேயே கடைக்குட்டி, நயனிதான்! அதனால், மற்ற எல்லோருமே அவனை சீராட்டி