இருந்தாலும், நயனிக்கு அன்றிலிருந்து மனதில் சிறிது விரிசல் விழுந்துவிட்டது!
"அம்மா! அப்ப நான் உன் பிள்ளை இல்லையா?"
" ச்சீ, பைத்தியம்! நீ என் பிள்ளைதான்டா! சும்மா, தாத்தா, பாட்டி குறையை தீர்த்துவைக்க ஒரு சின்ன ஏற்பாடா, உன்னை அவர்களுக்கு சுவீகாரம் தந்தேன். ஆனால், அவர்கள்தான் மூன்று மாதம்கூட உன்னுடன் வாழாமல், போய் சேர்ந்துவிட்டார்களே! இப்ப எதுக்கு அதெல்லாம்........"
நயனியும் அதையெல்லாம் மறந்து, குமுதவல்லி தம்பதியினரை 'அம்மா, அப்பா' என்று அழைத்து மகிழ்ந்தான்.
இதற்கிடையே, விபத்தின்போது சேதமடைந்த காருக்காகவும், இழந்த இரண்டு உயிர்களுக்காகவும் நஷ்ட ஈடு கேட்டு சம்பிரதாயமான கோரிக்கைமனு அனுப்பப்பட்டது.
காலமான சபேசன் சுயமாக உழைத்து முன்னேறிக்கொண்டிருந்த பெரிய ரியல் எஸ்டேட் அதிபர்.
அவர் அகால மரணத்துக்கு நஷ்ட ஈடாக பத்து கோடி ரூபாயும் காருக்காக சில லட்சங்களும் நஷ்ட ஈடு கோரப்பட்டிருந்தது!
ஏதேதோ கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்களே தவிர, இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி பணம் தராமல் இழுக்கடித்ததால், வழக்குப் போட ஒரு பெரிய வழக்கறிஞரை நியமித்து அவரிடம் வழக்கை ஒப்படைத்துவிட்டனர்!
நயனிக்கு பத்து வயதானபோது, வழக்கறிஞரிடமிருந்து போன் வந்தது.
கீழ் கோர்ட்டில், சாதகமாக தீர்ப்பு வந்துவிட்டதாகவும் ஆனால் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி அப்பீல் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
"கேஸ், கோர்ட்னு போனால், இழுபறிதான்! ஹைகோர்ட்டிலே மூணு பெஞ்ச், பிறகு சுப்ரீம் கோர்ட்டிலே மூணு பெஞ்ச்னு முப்பது, நாற்பது வருஷமாகும். பேரக் குழந்தைகளுக்குத்தான் பணம் கிடைக்கும்....."
இதைப்பற்றியெல்லாம், நயனியோ அவன் அக்காக்களோ எவருமே கவலைப்படவில்லை.
நயனி பள்ளி இறுதி பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்தான்.
இரவுநேரம். மணி பன்னிரண்டு, நள்ளிரவு!
நயனி, தன் பின்னே யாரோ நிற்பதுபோல் நிழலாடவே, திரும்பிப் பார்த்தான்.
கையில் டீ டம்ளருடன் குமுதவல்லி!
" அம்மா! நீ இன்னும் தூங்கலே?"