பாராட்டி வளர்த்தனர்!
குமுதவல்லியின் கணவன் குமரேசனுக்கு தன் வேலையை பார்க்கவே நேரம் சரியாக இருந்ததால், அவனால் குழந்தைகளிடம் போதுமான நேரம் செலவிட முடியவில்லை.
ஏழு குழந்தைகளையும் குமுதவல்லி மட்டுமே கவனித்துக் கொண்டதால், அவளுக்கு உலகமே அவர்கள்தான்!
நல்லவேளையாக, அவளுடைய தங்கைகள் நால்வரும் பெரியவர்களாகி, ஒருத்தி கல்லூரியிலும், மற்ற மூவர் பள்ளியிலும் படித்து வந்ததால், அந்தக் குழந்தைகளால் அவளுக்கு அதிக வேலையில்லை.
ஆனால், அவளுடைய மூன்று வயது, ஒரு வயது, ஆன இரண்டு குழந்தைகளும் மூன்றுமாத சிசுவாக தம்பியும் இருந்ததால், அவர்களை முழுநேரமும் கவனித்தாள்.
பாலகனாக இருந்தபோது, தம்பி நயனி அவளை 'அம்மா' என்றுதான் அழைத்தான். அதேபோல, குமரேசனை 'அப்பா' என்றுதான் அழைத்தான்.
அவனுக்கு உண்மை தெரியவே வேண்டாமென குமுதவல்லியும் குமரேசனும் முடிவு எடுத்தனர்.
ஏறத்தாழ ஐந்தாண்டுகள் ஆண்டுகள் அந்த உண்மை நயனிக்கு தெரியாமலே இருந்த நிலை, அவனை பள்ளியில் சேர்க்கும்போது, சிறிது விரிசல் கண்டது!
பள்ளியில் சேர்க்கப்படும் ஒவ்வொரு மாணவனும் கட்டாயமாக பூர்த்தி செய்யவேண்டிய படிவத்தில், நயனியின் பெற்றோர் பெயர் பூர்த்தி செய்யவேண்டிய தர்ம சங்கடம்!
வேறுவழியின்றி, சபேசன்-சுகுணா பெயரை குறிப்பிட்டார்கள், குமுதவல்லி தம்பதியினர்!
அப்போது, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை இருவரையும் ஒரு கேள்வி கேட்டு தர்மசங்கடத்தில் ஆழ்த்தினாள்.
" ஏன் உங்க பெயரை எழுதாம, தாத்தா, பாட்டி பெயரை எழுதியிருக்கீங்க?"
அவர்கள் அருகே நின்றிருந்த நயனியும் தலைநிமிர்ந்து இருவரையும் பார்த்தான்.
இந்த நிலமையை எப்படி சமாளிப்பது?
இறைவன் ஓடிவந்து அவர்களை காப்பாற்றினான்.
குமுதவல்லியின் மூலமாக, பகவான் பேசினான்.
" அதுவா? எங்கப்பா, அம்மாவுக்கு பிறந்தது ஐந்தும் பெண் குழந்தைகள். ஆண்குழந்தை பிறக்கவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. அதனால், இவனை அவர்களுக்கு சுவீகாரம் கொடுத்துட்டேன். அதாவது இவன் அவர்களுடைய adopted child ஆகிவிட்டான்...."
" ஓ! ஐ சீ!"