சிறுகதை - ஃபைலா லைஃபா? - ரவை
" இத பாரும்மா! எச்சரிக்கையா, விழிப்புணர்வோட ஜாக்கிரதையா இருப்பது வேறே, பீதியடைவது வேறே!
ரெண்டாவது, பீதியடைந்தவனாலே, மூளையே ஸ்தம்பித்து, செயலிழந்து, எதுவுமே செய்யமுடியாம, மற்றவங்களுக்கு அவன் ஒரு சுமையாகி விடுவான். அதனாலே, கடவுள்மீது பாரத்தை போட்டுவிட்டு, உங்க கடமையை, பொறுப்பை சரிவர செய்யுங்க! எந்த டாக்டராலேயும், எப்படி ஒரு நோயாளியை நிச்சயமா பிழைக்க வைச்சிடுவேன்னு சொல்லமுடியாதோ, அதேபோல, ஒரு நோயாளி நிச்சயமா இந்த நேரத்துக்குள்ளே இறந்துவிடுவான்னும் சொல்லமுடியாது!
டாக்டர்களே கடவுளை பிரார்த்தனை செய்தபிறகே, சிகிச்சையை துவங்குவாங்க!
புரிந்ததா? தைரியமாயிரு! உன் புருஷனை காப்பாற்ற என்ன செய்யமுடியுமோ, அதை கட்டாயம், தவறாம செய்து, பிழைக்கவைக்க முயற்சிக்கிறேன், நீ உன் புருஷனிடம் அவனுக்கு இருதய நோய் முற்றிய நிலையிலே இருக்குன்னு சொல்லிடாதே! அவனை நோய் கொல்லுமோ, கொல்லாதோ, பீதி நிச்சயமா கொன்னுடும்! புரிஞ்சுதா?"
இவ்வளவு நேரம் டாக்டர் மூச்சு விடாமல் பேசியதில், பூர்ணிமாவின் காதிலும் அறிவிலும் பதிந்ததோ, கடவுளுக்கே வெளிச்சம்!
அவள் டாக்டர் மூர்த்தி சொன்னதைக் கேட்டதும், அதிர்ச்சியுற்று செயலிழந்து நின்றாள்!
இருக்காதா, பின்னே? அவள் கணவன், நோயாளி ஆர். சுப்பிரமணியனுக்கு, முப்பது வயது இன்னும் முடியவில்லை.
அவனுக்கு எந்தவிதமான கெட்ட பழக்கமும் கிடையாது.
ஆபீஸில் நடக்கும் இரவு பார்ட்டிகளில், மற்றவர்கள் கையில் மது கோப்பையுடன் இரண்டு மணி நேரம் சிரித்துப் பேசி மகிழ்ந்தாலும், இவன்மட்டும் லெமன் ஜூஸ் குடித்து நேரத்தை தள்ளுவான்.
டின்னரில், விதவிதமான மாமிச வகைகள் பரிமாறப்பட்டாலும், இவன் சாப்பிடுவது, சாம்பார் சாதம், மசால் தோசை, தயிர்வடைதான்!
சிகரெட் பிடிக்கமாட்டான். புகையிலையை எந்த ரூபத்திலும் உட்கொள்ளமாட்டான்.
நேரத்தோடு சாப்பிடுவான், தூங்குவான், நடைப்பயிற்சி செய்வான்.
மொத்தத்தில் இவன் நல்ல பழக்கங்களின் சொந்தக்காரன்!
இவனுக்கு எப்படி இந்த வயதில் இருதயநோய் பாதிக்கமுடியும்? என்ற கேள்விக்கு டாக்டர் கூறிய பதில்:
" இருதய நோயில் பல வகைகள் உண்டு. கொலஸ்ட்ரால் அதிகம், இரத்தக்குழாய் அடைப்பு,