பார்த்து விட்டார்கள்.
குளிர் காற்றும் கதவும் தமது வேலையைத் தொடருகின்றன. மறுபடியும் க்ரீச்! க்ரீச்! க்ரீச்! சத்தம், அங்கு குளிரும் அதிகரிக்கிறது.
"பாட்டா! அவருக்கு அங்கேயும் குளிராக இருக்குமா?" மண்ணை அள்ளிக் குழியில் போடுபவர்களைப் பார்த்தபடி டோனி கேட்கிறான்.
"இல்லை!....அங்கு குளிராக இருக்காது”.
வேறு என்ன சொல்லமுடியும்? அங்கு நடப்பது யாருக்குத் தெரியும்?
இதே கேள்வியைத்தான் தனது வயதிலும் அவன் கேட்கப் போகிறான் என்பது எழுபது வயது முதியவருக்குத் தெரியாததா? தாத்தா டோனியின் முதுகைத் தடவுகிறார். அவனை ஆறுதல்படுத்த, சூடாக்க அல்ல.
உயிர் போனதும் குளிர் உடலைப் பாதிப்பதில்லை, பாதுகாக்கும். அதை நாலு வயதுச் சிறுவனுக்கு எப்படி புரிய வைப்பது?.
வேகமாக தெருவில் சென்ற கார் ஒன்று சடுதியாக நிறுத்தப்படும் சத்தம், அமைதியான அந்த இடத்தில் பாட்டாவையும் பேரனையும், தெருவைநோக்கிப் பார்க்க வைக்கிறது.
விதி யாரை விட்டது?. அந்த வெள்ளை குட்டிநாயின் உடல் தெருவோரத்தில் வீசி எறியப்பட்டு விட்டது.
காரை ஓட்டி வந்தவன் நிறுத்தாமல் சென்றுவிட்டான். அவனுக்கு என்ன அவசரமோ? சில நிமிடங்கள் சேமிப்பதற்காக, காரை வேகமாக ஓட்டி பத்து, பதினைந்து வருடங்கள் வாழக்கூடிய அந்த நாயின் உயிரையே எடுத்துவிட்டான்.
“அந்த கார் நிற்கவில்லை?” டோனி ஆச்சரியத்துடன் தாத்தாவைக் கேட்கிறான்.
"ஆமாம்….."
ஏன் அந்தக் கார் நிற்கவில்லை என்பதை எப்படி அந்தச் சிறுவனுக்கு விளக்குவது. தாத்தாவின் கேள்வியும் அதுதானே!
நாள்முழுவதும் கஷ்டப்பட்டு வேலை செய்துவிட்டு மாலை உணவை தனது மனைவி பிள்ளைகளுடன் உண்ண அவன் விரைவாகச் சென்றிருக்கக்கூடும் என்று சொல்ல முடியுமா? அது பொய்யல்லவா? வாழ்நாள் முழுவதும் பல பொய்களை சொன்னவருக்கு நாலு வயதுப் பையன் நம்பக்கூடிய ஒரு பொய் சொல்ல முடியவில்லை.
நாய் ஏன் காருக்கு குறுக்கே ஓடியது என்று நாயின்மேல் பழி போட முடியுமா? அல்லது, அவன் நாயை மோதிய குற்றஉணர்வில் அங்கிருந்து ஓடிவிட்ட்டான் என்று சொல்ல முடியுமா?