சிறுகதை - மாறாது மாற்றம்! - ரவை
சென்னையிலிருந்து கோவைக்கு திரும்பியதிலிருந்து, மகா வெதும்பிக் கொண்டிருந்தாள்.
அவனை சுற்றி சுற்றி வந்தேனே, வெட்கத்தைவிட்டு என் மனதை, 'நான் பாடிக் கொண்டேயிருப்பேன், உன் பக்கத்துணையிருப்பேன்' என்று பாடிக் காட்டினேனே!
அவனும் என் கைகளை எடுத்து தன் கண்ணில் ஒற்றிக்கொண்டானே!
அதற்கென்ன பொருள்? அவனும் என்னை விரும்புகிறான் என்பதுதானே!
பின், ஏன் நேரிடையாக கேட்டபோதும், பிடி கொடுக்காமல், நழுவினான்.
ஒரு வருஷம் கழித்துத்தான் இதைப்பற்றி, சிந்திப்பானாம், அப்போதுதான் முடிவு எடுப்பானாம்!
என்னை மேலே படிக்க சிபாரிசு செய்கிறான்!
நான் மேலே படிக்கிறேன், அல்லது நடிக்கிறேன், இவன் யார் சிபாரிசு செய்வது?
எல்லாம் பணத்திமிர்!
திடீர் பணக்காரனுக்குரிய திமிர்! ரெண்டு மாசம் முன்பு, குப்பத்தில் புரண்டவன், இப்போ, குபேரன்!
பேரைப் பார்! 'சீமான்'!
பொறக்கும்போதே, எவனோ, இவன் திடீர் குபேரன் ஆவது தெரிந்து வைச்ச பேர்!
எல்லாம் இந்த சுந்தரி செய்த கூத்து!
காதுலே பூ சுத்தற கதை!
அவனை பார்த்தவுடனே, இவளுக்கு போன பிறவியிலே அவனோட நெருக்கமா பழகினதெல்லாம் நினைவுக்கு வந்ததாம்!
காலையிலே என்ன சாப்பிட்டேன்னு கேட்டால், நூறு தடவை யோசிப்பாள், போனபிறவியிலே நடந்தது, ஞாபகத்துக்கு வந்ததாம்!
இந்தக் கதையை அவளை பெத்தவங்களும் நம்பினாங்க, பார்! அந்த முட்டாளுங்களை என்ன சொல்ல?
இவங்க எல்லாரையும்விட, அவன் கில்லாடி!
" ஆமாம் சுந்தரி! நீ சொல்றது கரெக்ட்! ஆனா நீ சொல்றியே நெருக்கம், அது 'பாச மலர்' நெருக்கம்! அண்ணன்-தங்கை நெருக்கம்! நான்தான் சிவாஜி, நீதான் சாவித்திரி!"
தெருவிலே போற படிக்காதவன்கூட இந்தக் கதையை நம்பமாட்டான், இந்த படிச்ச முட்டாளுங்க, நம்பி, அந்த கில்லாடியை பல கோடி ரூவா சொத்துக்கு வாரிசு ஆக்கிட்டாங்களே, ஒரே நிமிஷத்திலே!
இதை என்ன சொல்றது? எங்கே போய் முறையிடறது?
எனக்கொண்ணும், அவன் சொத்துமேலே ஆசை இல்லே, எங்கப்பாவிடம் இல்லாத சொத்தா?