சென்னையிலே இருக்கிறவன், எப்படி எப்போ கோவைக்கு வந்தான்?
நான் பேசினது, எப்படி அவன் காதிலே விழுந்தது?
நான், என் மனசுக்குள்ளேதானே பேசினேன்!
" உன்னைப் பார்க்க சென்னையிலிருந்து ஓடோடிவந்திருக்கிற என்னை 'வா'ன்னு கூட அழைக்கமாட்டியா?
சென்னையிலிருந்து நீ கிளம்பும்போதுதான், உனக்கு என்மீது கடுங்கோபம்! என் முகத்தைக்கூட பார்க்காம, வந்துட்டே, இப்ப என்ன?
இன்னுமா என்னை நினைச்சிட்டிருக்கே?
மகா! உட்கார்! நான் சொல்றதை பொறுமையா கேள்!
நீ என்னை மறக்கமுடியாம, என்னையே நினைச்சிக்கிட்டிருக்கிறது, என்மீதுள்ள பிரியத்தினாலே இல்லே, பின்னே எதனாலேன்னு கேட்கறியா? சொல்றேன்!
உன்னை நான் அவமானப்படுத்திட்டதா நீயா கற்பனை பண்ணிக்கிட்டு, உன் ஈகோ உன்னை வறுத்து எடுக்குது!
பாவம்! நீ இன்னமும் சின்னக் குழந்தையாவே இருக்கே! சூதுவாது தெரியாம, உன்னை வளர்த்துட்டாங்க!
உன்னை வெறுப்பேத்தறது, வேற எவருமில்லே, உன் மனசுதான்!
எப்பவும் ஒண்ணு கவனமா வைச்சுக்க! உன் கௌரவம், மரியாதை என்பது பிறர் கொடுப்பதல்ல! அப்படி இருந்ததுன்னா, உனக்கு சொல்லாமலே, கொடுத்தமாதிரி, ஒருநாள், திருப்பி எடுத்துக்குவாங்க!
அது நிரந்தரமல்ல; நிஜமான கௌரவமும் அல்ல!
நீ உன்னைப் பற்றி நம்புகிற பெருமையும் சுயமரியாதையும்தான், உண்மை!
சந்தோஷமும் அப்படித்தான்! வெளியிலிருந்து வருவதல்ல, உன் ஈகோ செயற்கையா உண்டுபண்ணி உன்னை ஏமாற்றி, வேடிக்கை பார்க்குது! அதுக்கு பொழுது போகாம, உன்னுடன் அது விளையாடுது!
என்னை எப்படி மறப்பதுன்னு நீ என்னை நினைச்சிக்கிட்டேயிருக்கே!
எப்படி மறக்கிறதுன்னு சொல்லித்தரேன், கேள்!
ஞாபகம் வைச்சுக்க!
நீ வேற, உன் மனசு வேற!
உன் கை, உன் கால், உன் கண், உன் இதயம் என்பதுபோல, உன் மனசு வேற, நீ வேற!