சிறுகதை - எது வேண்டும்? - ரவை
" மீனா! நாம ஒரு தப்பு செய்துவிட்டோமோ என நினைக்கிறேன்......."
" நீங்க நினைக்கிறதையேதான் நானும் நினைக்கிறேன், மகாவை வேண்டாம்னு ரெண்டு வருஷம், நித்யாவை வேண்டாம்னு ரெண்டு வருஷம், நிருபமாவை வேண்டாம்னு ரெண்டு வருஷம்னு மொத்தமா ஆறு வருஷம், குழந்தையின் கல்யாணத்தை தள்ளிப்போட்டு வந்ததிலே, இப்போ, அவனுக்கு தகுந்த பெண் கிடைக்குமான்னு பயம் வந்துடிச்சிங்க.........."
" குழந்தை நம்மிடம் முடிவை விட்டதினாலேதானே, தள்ளி தள்ளிப்போய், ரொம்ப லேட்டாயிடுத்து! இனிமேல், அவனே முடிவு எடுக்கட்டும், சீக்கிரமா எடுத்து, ஊரே மூக்கிலே விரலை வைக்கும்படியா, கல்யாணத்தை விமரிசையா நாம செய்துடுவோம்....."
"சரியா சொன்னீங்கப்பா! ஆமா, இப்பல்லாம் அண்ணன் வீட்டிலேயே தங்கறதில்லையே, ஏன்?"
“ சுந்தரி! உங்க அண்ணன், என்னை முற்றிலுமா வீட்டிலே ஓய்வு எடுக்கச் சொல்லிட்டு, பிசினசை முழுக்க முழுக்க அவனே பார்த்துக்கறாம்மா! ஆனா, பிரமாதமா செய்கிறான், லாபம் இரட்டிப்பா கிடைக்குது...."
" கேட்கவே சந்தோஷமா இருக்குப்பா!"
" ஏம்மா சுந்தரி! உன்னிடம் ரொம்ப நாளா ஒரு விஷயம் கேட்கணும்னு நினைச்சிக்கிட்டிருக்கேன், மறந்துபோயிடுது, வயசாகுது இல்லே......"
" வயசாகுதா, இல்லையா ஏதாவது ஒண்ணு சொல்லும்மா!"
" போடீ! என்னை கிண்டல் பண்ணிக்கிட்டு! இப்படி ஏதாவது பேசி, நான் கேட்க வந்ததை மறந்துடறேன், .....சுந்தரி!
உனக்கும் உங்க அண்ணனுக்கும் பொதுவா ஒரு பெண் சிநேகமா இருந்தாளே, பாதிரியோ, பார்வதியோ, ........?"
" ஆமாம், அவ பெயர், பார்வதி! அவளுக்கென்ன?"
" அந்தப் பொண்ணுக்கும் உங்க அண்ணனுக்கும் இடையே உறவு எப்படி?"
" அம்மா! அந்தப் பாவத்தை செய்தது, இந்தப் பாவிதான்! பார்வதிக்கும் அண்ணனுக்கும் படிக்கிறபோதே காதல் இருந்தது, அந்த நினைப்பிலே,ஒருநாள் அவ, அண்ணனை பார்க்க, நம்ம வீட்டுக்கு வந்தா, அப்ப எனக்கும் அண்ணனுக்கும் இடையே மனஸ்தாபம், அதனாலே, அவளை இனிமே இந்தப் பக்கம் வராதேன்னு விரட்டிட்டேன், எனக்கிருந்த கோபத்திலே அவளோட அப்பா, அம்மாவிடம் சொல்லி, அவளுக்கு வேறொருத்தனோட கல்யாணமும் பண்ணவச்சேன் இப்ப, அவளுக்கு ரெண்டு வயசிலே ஒரு குழந்தை இருக்கு......." என்று சுந்தரி தலையில் அடித்துக்கொண்டாள்.
மீனா, கணவனைப் பார்க்க, அவரும் அவளைப் பார்த்து, பெருமூச்சு விட்டனர்.