உனக்கு விருப்பமான எந்தப் பெண்ணாக இருந்தாலும், நீயே பார்த்து முடிவு செய்து, எங்களுக்கு சொன்னால், போதும்!
ஆனா, குழந்தே! கொஞ்சம் சீக்கிரம் அதை செய்டா, கண்ணா!
நாளைக்கே நம்ம பிசினசுங்களை அப்படி அப்படியே விற்றுவிடு! போதும்!
இனி, எங்களோட நாள் முழுவதும் வீட்டிலே இருக்கணும், அந்த சந்தோஷம் .........."
" நிரந்தரமா உங்களுக்கு கிடைக்கணும் என்பதே என் ஆசை! எவ்வளவு நல்லவளா வரப்போற மருமகள் இருந்தாலும், அவ தனக்குன்னு சில ஆசைகளோட வருவா, இல்லையா?
அந்த ஆசைகளை நிறைவேற்றுவது, கணவன் என்னுடைய கடமை ஆயிடும்.
அப்போ, இப்ப இருக்கிற நம்ம மூணுபேர் உறவு நிச்சயமா பாதிக்கும். அது வேண்டவே வேண்டாம்!"
" நீ சொல்றது சரிடா, கண்ணா! ஆனா, தாயும் சேயும் ஆனாலும் வாயும் வயிறும் வேறுதானே! உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணும்டா! அதை அமைத்து தரவேண்டியது உன்னோட அப்பா, அம்மாவான எங்க கடமைடா!"
" ஊரிலே உலகத்திலே எல்லாரும் சொல்றதையே நீங்களும் சொல்றதை நிறுத்திட்டு, கொஞ்சம் யோசியுங்க!
எனக்கு கல்யாணம் செய்துவைப்பது எதற்கு? நான் சந்தோஷமா இருக்கத்தானே?
கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறியற கதைதான்!
அப்பா! அம்மா! எங்கேயோ குப்பத்திலே கிடந்த எனக்கு எத்தனை பெரிய வாழ்க்கையை தந்து இருக்கீங்க!
நினைச்சுப் பாருங்க! அன்றைக்கு நான் உங்களைத் தேடி வந்தது, ஒரு வேலை போட்டு கொடுங்கன்னு கேட்கத்தான்!
இப்ப, நான் தினமும் ஆயிரம் பேரை வேலை வாங்கறேன், எனக்கு இந்த உயர்வை, பெருமையை, தந்த உங்களுக்கு என் உடம்பை செருப்பா தைத்துப் போடணும்!
வேண்டாம்மா! வேண்டாம்ப்பா! நமக்கிடையே மூன்றாவது நபர் வரவேண்டாம்!
இப்ப நம்மிடையே இருக்கிற இந்த பாசத்திலே இம்மியளவுகூட குறைய நான் அனுமதிக்க மாட்டேன்.
உங்களுக்கும், நான் சந்தோஷமாயிருக்கணும்னு தானே ஆசை! அதற்குத்தானே எனக்கு கல்யாணம் செய்துவைக்க ஆசைப்படறீங்க!
நான் உறுதியா சொல்றேன், நான் சந்தோஷமா இருக்கமாட்டேன், கல்யாணம் செய்துகிட்டா!