அநாதரவாக இருந்த டோனியை தத்தெடுத்து தாயுக்குத் தாயாய் தந்தைக்குத் தந்தையாய் தன்னை வளர்த்த தாத்தா, தனக்கொரு துணையைத் தேடவில்லை. தனது காதலையும் டோனிக்காக தியாகம் செய்தார்.
இடுகாட்டில் எல்லாம் மாறிவிட்டன.
அந்த புதிய கதவு, க்ரீச்! க்ரீச்! என்று சத்தமிடவில்லை. அது அங்கும் இங்கும் அசையவுமில்லை.
அப்போதிருந்த புதிய சிலுவைகள் இப்போது பழையவையாகிவிட்ட்டன.
பழையதெரு பெருந்தெருவாகி, புதுத்தெருவாக மாறிவிட்டது. அதில் குட்டிநாய் அங்கும் இங்கும் ஓடவில்லை.
கல்லூரி பேராசிரியரான அவனிடம் கேள்வி கேட்க பேரன்அருகில் இல்லை!
அவனது பேரன்தான் கணனியிலும், கைப்பேசியிலும் மூழ்கி, தனது அறையிலேயே அடைந்து கிடக்கிறானே. டோனியைப்போல் தாத்தாவுடன் மாலைப் பொழுதைக் கழிக்க அவன் கொடுத்து வைக்கவில்லை.
ஆனால், அந்த காற்று மாத்திரம் மாறவில்லை. மீண்டும், மீண்டும் பிராண வாயுவை அள்ளிவந்து உயிரினங்களையும் தாவரங்களையும் காக்கும் தன் பணியைச் செய்ய அங்கு வந்துவிடுகிறது.
கரியமில வாயுவை உலகில் அள்ளித்தரும் மனிதன், தன கடமையை சரிவர செய்வதில்லை என்பதை போதிப்பதுதான் டோனியின் பணி. படிப்பறிவில்லாத தாத்தா அவனுக்குக் கொடுத்த கல்வியெனும் இன்னுமொரு கோடை!
உயரமான புற்கள் வளைந்து தம்மை நோக்கிவரும் காற்றை எதிர்ப்பின்றி போகவிடுகின்றன. எதிர்வரும் குளிர் காற்றுக்கு அவை கொடுக்கும் ஒரு கனிவான மரியாதை.
டோனியால் தன் கண்களை நம்பமுடியவில்லை. தாத்தாவும் அவனும் அந்த குட்டி நாயைப் புதைத்த இடத்தில் இருந்து அவனை நோக்கி வேகமாக ஓடி வருகிறது ஒரு வெள்ளைநாய்!
அவன் எழுந்து அதை நோக்கி நடக்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைக்கிறார்கள். குட்டிநாய் மீண்டும் வந்துவிட்டது! அதை அணைத்தபடி வீடு நோக்கி போகிறான் டோனி.
மீண்டும் தனக்கு நாலு வயதாகி, தாத்தாவே திரும்பி வந்ததுபோன்ற உணர்வு. அந்த குளிர்காற்றையும் அவனால் உணரமுடிகிறது!
வந்த நாள் முதல் இந்த நாள் வரை .............காற்றும் மாறவில்லை, மனிதன் மாறிவிட்டான்.