சுதந்திர தின சிறப்பு சிறுகதை - என்னால் முடிந்தது! - ரவை
ஈசிசேரில் அமர்ந்து பேப்பரை கையில் பிரித்து வைத்துக் கொண்டு முதியவர் வழக்கம் போல, அரசியல்வாதிகளை வசை பாடினார்:
"ஒரு வருஷம், ரெண்டு வருஷம் இல்லே, எழுபத்தி மூணு வருஷம் ஓடிப்போச்சு! சுதந்திரம் வந்ததும், இந்த நாட்டிலே தெருவிலே தேனும் பாலும் ஓடும்னு பாட்டு பாடி ஓட்டு வாங்கி ஆட்சியிலே உட்கார்ந்தானுவ! என்ன செய்தானுவ? மாமன், மச்சானுக்கு பதவி தந்தாங்க, டெண்டர் விட்டு கொள்ளை அடிச்சாங்க, சாதி பெயரிலே ஓட்டு கேட்டு பதவிக்கு வந்து, சாதிகளை நிரந்தரமாக்கினாங்க....எம்.பி., எம்.எல்.ஏ., க்களிலே, நூற்றுக்கு ஒருவன், ரெண்டு பேரைத் தவிர, மீதி அத்தனை பேரும் கோடிக் கணக்கிலே சொத்துள்ளவன், இவன்களுக்கு எப்படி இத்தனை பணம் வந்தது,ஐந்து வருஷத்திலேன்னு கேள்வி கேட்டா, குண்டர் சட்டத்திலே உள்ளே தள்ளி முப்பது வருஷத்துக்கு பழி வாங்குவானுவ......"
கையில் கரண்டியுடன் சமையலறையில் இருந்து வெளிவந்த கிழவி, கிழவன் கையிலிருந்த பேப்பரைப் பிடுங்கி வீசி எறிந்தாள்.
" தினமும் காலைலே இதுவே பொழைப்பா போச்சு வீட்டிலே பிள்ளைங்க படிக்க முடியலே, நைட் டியூடி செய்த மகன் தூங்க முடியலே, ஒரே சத்தம், நான் பேசறது உங்க காதிலே விழுதா? நாளை முதல், பேப்பரை நிறுத்திடப் போறேன்....காலாற வெளியே நடந்துட்டு வாங்க! அங்கேயும் எவனிடமாவது எதையாவது பேசி வம்பை விலைக்கு வாங்கிடாதீங்க, போங்க!"
முதியவர் கஷ்டப்பட்டு ஈசிசேரிலிருந்து எழுந்து துண்டை தோளில் போட்டுக் கொண்டு, பொடி டப்பாவை திறந்து மூக்குப்பொடியை உறிஞ்சிவிட்டு, வெளியேறி முகத்தை துடைத்துக் கொண்டார். பொடியின் காரம் அவராலேயே தாங்க முடியலே!
" அம்மா! வெற்றிகரமா அப்பாவை வெளியே அனுப்பி விட்டீங்க!இவரை இத்தனை வருஷம் எப்படி சமாளிச்சீங்க என்று நினைத்தாலே 'திக்'னு இருக்கு!"
" சோமு! தாத்தா நடத்தின ஆரம்பப் பள்ளிக்கூடத்திலேயே உங்க அப்பாவுக்கு அவரோட இருபது வயசிலே வாத்தியார் வேலை! அறுபது வயசிலே ரிடையராகிற வரையிலும் ஒண்ணாங்கிளாஸ் ஆசிரியர் வேலை பார்த்தபோது, இவர் பேசறதை சின்னப்பிள்ளைங்க சமத்தா கேட்டு படிச்சு பாஸ் பண்ணி இப்ப அமெரிக்காவில் லண்டனில் துபாயில் வேலை பார்த்து கொழிக்கிறாங்க!
இவருக்குப் பேசறதே, தொழில்! ஆனா, ஒருத்தரும் எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது! தனக்குத்தானே பேசிக்கிட்டு இல்லேன்னா, பைத்தியம் பிடிச்சிடும் அவருக்கு, அவர் பேசறதைக் கேட்டா, நமக்கு பைத்தியம்பிடிச்சிடும்...."
" பாவம்மா நீங்க! ஒருயோசனை சொல்றேன், ட்ரைபண்றியா?"
" சொல்லு "