" தர்மா! நீ சின்னப்பையன், இந்த விஷயத்திலே தலையிடாதே! போ! உன் காரியத்தை கவனி! பெரிய மனுஷன்போல, பேச வந்துட்டான்......கோமு! அவனை தூண்டிவிட்டு, நல்ல பெயர் நீ வாங்கிக்கலாம்னு பார்க்கிறியா? நடக்காது!
நான் சொல்றதை நீங்க கேட்கலேன்னா, இந்த வீட்டிலே உங்களுக்கு இடம் இல்லே, வெளியிலே போய் விடுங்க, ரெண்டு பேரும்! அப்பத்தான் தெரியும், இந்த அண்ணன் நல்லவன்னு...."
" பிரமாதம்ப்பா! எனக்கு ரெண்டு வயசிலே, நீ தனியா கஷ்டப்பட்டபோது, என்னை வளர்த்து ஆளாக்கின அத்தையை வீட்டைவிட்டு விரட்டறீங்களா, இப்ப அவங்க தயவு தேவையில்லே உனக்கு, ஏன்னா நான் வளர்ந்துவிட்டேன்,....
அப்பா! அத்தைக்கு இந்த வீட்டிலே இடம் இல்லேன்னா, எனக்குமில்லே!
நீங்க தனியா ஜாலியா இருக்கலாம்...."
" என்ன, மிரட்டறியா? என் தயவு இனி உனக்கு தேவையில்லேங்கற திமிரா? பார்க்கலாம், என்ன நடக்கிறதுன்னு....."
கோமதி கண்களை துடைத்துக்கொண்டே, உள்ளே சென்றாள். தர்மன் உறுமிக்கொண்டே, வெளியே சென்றான்.
" மாமா! அவங்களுக்கு உங்க நல்ல மனசு புரியலே! ஐம்பதுங்கறது, ஒரு பெரிய வயசா? உங்களுக்கும் அந்த வயசுதான்! நீங்க ராஜாமாதிரி ஜோரா இல்லையா?
இப்ப சொல்லுங்க, .., உங்களுக்கு கழுத்தை நீட்டி தாலியை ஏத்துக்கறேன்....."
உள்ளேயிருந்து, கோமதி 'அடிப் பாவி'ன்னு அலறுவது இருவர் காதிலும் விழுந்தது!
சைகையால், தேவிகா, மாமாவிடம் எதுவும் பேசாதே, எனச் சொல்லிவிட்டு, அவர் கையை பிடித்து இழுத்தவாறு பூஜையறைக்குள் நுழைந்து, கடவுள் படத்தின் முன்பாக, மாமாவின் கையிலடித்து சத்தியம் செய்தாள்.
கல்யாணராமனால் நம்ப முடியவில்லை!
எப்படி இவளால் இதை செய்ய முடிகிறது?
ஏன், தானே இவளை தன் இரண்டாம் மனைவியாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என அவருக்கு சபலம் எழுந்தது.
மனதிற்குள் திட்டம் உருவாகியது! அதன்படி, தன் தங்கையை சமாதானப்படுத்த, அவளைத் தேடிச் சென்றார்.
கோமதி அழுது வடிந்த முகத்துடன், வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள், பின்புறப் பகுதியில்!