“அப்பவே பசங்களை ஸ்கூல்க்கு அனுப்ப வேண்டாம்ன்னு சொன்னேன்... இவர் எங்க கேட்டார்...”, க்ருஹா அலுத்துக்கொள்ள வரதன் அவளை முறைத்தான்...
“அப்பறம் இந்த சொம்புல மந்திரச்ச தண்ணீர் வச்சுருக்கேன்... இதை ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி குடிச்சுட்டு படுங்க....”
ஒரு வழியாக எல்லாவற்றையும் சொல்லி முடித்த மாந்த்ரீகர் தான் கொண்டு வந்த சாமான்களை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.... அவர் கிளம்பியதும் வாசலைப் பூட்டிவிட்டு வந்த வரதன் தன் தம்பியை அழைத்து இன்று ஒரு நாள் குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து சென்று பார்த்துக்கொள்ளுமாறு அலைபேசியில் அழைத்து கூறினான்...
“ஹப்பாடா ஒரு வழியா பூஜையை முடிச்சாச்சு.... இனி பாருங்கோ உங்களுக்கு எல்லாம் நல்லது மட்டும்தான் நடக்கும்... சரி டின்னெர்க்கு என்ன வேணும் சொல்லுங்கோ... சீக்கிரம் சாப்பிட்டு படுக்கலாம்.... காலங்கார்த்தால எழுந்து வேலையெல்லாம் செய்தது ஒரே அலுப்பா இருக்கு...”, க்ருஹா சொல்ல, ‘இவ அலுக்கற அளவுக்கு என்ன வேலை செய்தா...’, என்று பார்த்தான் வரதன்...
“டின்னர் ஏதானும் சிம்பிள்ளா பண்ணு போறும்... அதுக்கு முன்னாடி இந்த வெள்ளி சாமானெல்லாம் மட்டும் எடுத்து வச்சுடலாமா....”
“என்னன்னா சொல்றேள்... ஸ்வாமிஜிதான் எதையும் எடுக்கக்கூடாதுன்னு சொன்னாரோ இல்லையோ... எல்லாம் கார்த்தால பார்த்துக்கலாம்.....”, க்ருஹா சொல்ல, எப்பொழுதும் போல் தலையசைத்தான் வரதன்....
இரவுணவு முடித்து மாந்த்ரீகர் சொன்னபடியே, அந்த மந்திரத் தண்ணீரையும் குடித்து படுக்க சென்றனர்... அந்தத் தண்ணீர் குடித்த சற்று நேரத்திற்கெல்லாம் இருவருக்கும் தூக்கம் கண்ணை சுழற்ற ஆரம்பித்தது....
அவர்கள் படுத்த அடுத்த அரைமணியில் வீட்டின் கதவு தட்டப்பட்டது... தூக்கக் கலக்கத்துடனே எழுந்து சென்ற வரதன் கதவைத் திறந்தான்...
அங்கு வந்திருந்தது காலையில் மாந்த்ரீகருடன் வந்த அவரின் உதவியாளர்... அவர் ஏதோ கேட்க அரைகுறையாக பதிலளித்தான் வரதன்...
அவர் சென்றவுடன் கதவை தாள் போட்டுவிட்டு படுத்ததுதான் தெரியும்... அடித்து போட்டாற்போல் இருவரும் தூங்கினர்... காலை எட்டு மணிக்குத்தான் இருவரும் துயில் கலைந்து எழுந்தனர்...
‘ஐயோ மணியாகிவிட்டதே, குழந்தைகள் இருவரும் என்ன செய்கிறார்களோ’, என்ற தவிப்புடன் தன் தம்பிக்கு அழைத்தான் வரதன்...